பிரதமர் வேட்பாளரை பாஜக முடிவு செய்ய சிவசேனா எதிர்ப்பு! என்.டி.ஏ தீர்மானிக்க வலியுறுத்தல்!!
மும்பை: தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளரை பாரதிய ஜனதா கட்சி மட்டுமே முடிவு செய்ய மற்றொரு கூட்டணிக் கட்சியான சிவசேனா கடும் எதிர்ப்பு தெரிவித்திருப்பதால் பாஜகவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது.
பாரதிய ஜனதா கட்சியில் பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை முன்னிறுத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இதற்கு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஐக்கிய ஜனதா தளம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. டெல்லியில் அண்மையில் நடைபெற்ற அதன் தேசிய செயற்குழுக் கூட்டத்தில் நரேந்திர மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து பகிரங்கமாகவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனால் பாரதிய ஜனதா கட்சி - ஐக்கிய ஜனதா தளம் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் பாஜகவின் மற்றொரு கூட்டணிக் கட்சியான சிவசேனாவும் நரேந்திர மோடிக்கு எதிராக போர்க் கொடி தூக்கியிருக்கிறது. சிவசேனாவின் ஏடான சாம்னாவில் இன்றைய தலையங்கத்தில் மோடி விவகாரத்தில் காட்டமான நிலையை சிவசேனா வெளிப்படுத்தியிருக்கிறது. அதில் மோடியை பிரதமர் வேட்பாளராக முன் நிறுத்துவதால் 5 முதல் 10 இடங்கள் பாஜகவுக்கு கூடுதலாக கிடைக்கலாம்.. ஆனால் பழைய கூட்டணிக் கட்சிகள் வெளியேறினால் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 25 இடங்கள் வரை இழப்பு ஏற்படும். குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக்க முடிவு செய்யலாம்.. ஆனால் இறுதி முடிவை தேசிய ஜனநாயகக் கூட்டணிதான் முடிவு செய்ய வேண்டும் என்றும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஏற்கெனவே ஐக்கிய ஜனதா தளம் இந்த ஆண்டின் இறுதிக்குள் யார் பிரதமர் வேட்பாளர் என்பதை அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வரும் நிலையில் சிவசேனாவும் பாஜகவுக்கு நெருக்கடி கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications