விமான நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயர் வைப்பதால் குழப்பம் வரும்!- கருணாநிதி
இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
சென்னை உள்நாட்டு விமான நிலையத்தின் இரண்டாம் முனையத்துக்கு எம்.ஜி.ஆர். பெயரைச் சூட்ட சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இத் தீர்மானத்தை மு.க.ஸ்டாலின் வரவேற்றுள்ளார்.
1990ஆம் ஆண்டு சென்னை கடற்கரையில் அப்போதைய பிரதமர் வி.பி.சிங் பங்கேற்ற பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நான் (கருணாநிதி) பேசும்போது, மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு அண்ணா பெயரும், காமராஜர் பெயரும் சூட்ட வேண்டும் என்று பிரதமருக்கு வேண்டுகோள் விடுத்தேன்.
பின்னர் உள்நாட்டு விமான தளத்துக்கு காமராஜர் பெயரும் வெளிநாட்டு விமான தளத்துக்கு அண்ணா பெயரும் சூட்டப்படும் என்று வி.பி.சிங். அறிவித்தார்.
சென்னை உள்நாட்டு விமான நிலையத்தின் இரண்டாம் முனையத்துக்கு எம்.ஜி.ஆர். பெயரைச் சூட்டவேண்டும் என்று இப்போது பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
விமான நிலையம் என்றால் உள்நாட்டு முனையம், வெளிநாட்டு முனையம் என்று இரண்டுதான் இருக்க முடியும்.
தற்போது உள்நாட்டு முனையம் மட்டும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. அதற்கு மற்றொரு பெயர் வைப்பது குழப்பமாக உள்ளது.
இந்தக் கருத்தை நான் மட்டுமில்லை, காமராஜர் மீது அன்பு கொண்டவர்களும் எழுப்புகின்றனர்.
தமிழகமே மிகவும் உயர்ந்த நிலையில் வைத்துக் கொண்டாடி, இன்றளவும் போற்றிப் பாராட்டி வரும் ஒரு தலைவரின் பெயரைச் சூட்ட நினைக்கும்போது அதில் எந்தவிதமான குழப்பங்களும் ஏற்படக்கூடாது. எனவே கருத்து வேறுபாடுகள் ஏற்படாத வகையில் அனைத்துத் தரப்பினரும் மனமுவந்து வரவேற்கத்தக்க நிலையில் செயல்பட வேண்டும்."
இவ்வாறு கருணாநிதி தன் அறிக்கையில் கூறியுள்ளார்.