தண்ணீர் பிரச்சனை: உடன்குடி அருகே பஞ்சாயத்து தலைவியை கொல்ல முயற்சி
தூத்துக்குடி: உடன்குடி அருகே பஞ்சாயத்து தலைவியை கொல்ல முயன்ற கூலி தொழிலாளியை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை அடுத்துள்ள மெஞ்ஞானபுரம் அருகே உள்ள வெள்ளாளன்விளை நயினார்குளத்தை சேர்ந்த ஞானதுரை மகள் திலகவதி. அவர் வெள்ளாளன்விளை பஞ்சாயதது தலைவியாக உள்ளார். அவரது தம்பி சார்லஸ் நயினார்குளத்தில் பலசரக்கு கடை வைத்துள்ளார். நேற்று இரவு நயினார்குளம் வந்த திலகவதி சார்லசின் கடை முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு குடிபோதையில் வந்த சுதந்திர நகரைச் சேர்ந்த கூலி தொழிலாளி லிங்கம் என்பவர் திலகவதியிடம் வீட்டு குடிநீர் இணைப்பு பெற்றும் தண்ணீர் சரியாக வரவில்லை என்று கூறினார். அதற்கு திலகவதி சிறிது குழப்பம் உள்ளது. விரைவில் சரி செய்யப்படும் என்றார். இதனை ஏற்காத லிங்கம் அவரிடம் தகராறு செய்தார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த லிங்கம் திலகவதியை கடுமையாக தாக்கினார்.
இதனை தடுக்க முயன்ற அவரது தம்பிக்கும் அடி விழுந்தது. மேலும் கடையில் இருந்த சோடா பாட்டிலை எடுத்து திலகவதியின் கையில் குத்தி கொலை மிரட்டல் விடுத்தார். இதில் படுகாயம் அடைந்த திலகவதி உடன்குடி அரசு மருத்துவமனையில் சேர்கத்கப்பட்டார். இது தொடர்பாக மெஞ்ஞானபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தப்பி ஓடிய லிங்கத்தை தேடி வருகின்றனர்.