விசாரணைக்கு ஆஜராகவில்லை: ஜெ. தொடர்ந்த அவதூறு வழக்கில் விஜயகாந்துக்கு பிடிவாரண்ட்

கடந்த ஆண்டு நெல்லையில் நடந்த பொதுக் கூட்டம் ஒன்றில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உரை நிகழ்த்தினார். அப்போது அவர் முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாகப் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அவர் மீது நெல்லை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு விஜயகாந்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் நேரில் ஆஜராகவில்லை. இதையடுத்து நீதிமன்றம் விஜயகாந்துக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.
விஜயகாந்த் ஆஜரவார்:
நெல்லை நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ள நிலையில் விஜயகாந்த் நாளை நீதிமன்றத்தில் ஆஜர் ஆவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தேமுதிக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது திருநெல்வேலி மாவட்ட மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அவதூறு வழக்கில் இன்று (17.04.2013) பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தை புறக்கணிக்க வேண்டும் என்கிற எண்ணம் தேமுதிக தலைவருக்கு சிறிதும் கிடையாது. பல அவதூறு வழக்குகளில், பல நீதிமன்றங்களுக்கு அவர் நேரில் சென்று ஆஜரானதே இதற்கு சாட்சி.
சட்டப் பேரவையில் பிரதான எதிர்க்கட்சியான தேமுதிக முதலில் பேச வாய்ப்பு மறுக்கப்பட்டு, கடைசியாக பேச வேண்டும் என்ற பிரச்சனை காரணமாக உருவான அரசியல் சூழல் குறித்து தேமுதிக சட்டமன்ற உறுப்பினர்களுடன் விஜயகாந்த் இன்று முக்கிய ஆலோசனையில் இருந்த காரணத்தினால் இன்று (17.04.2013) நீதிமன்றத்தில் ஆஜராக இயலாத நிலை ஏற்பட்டது.
மேலும் எங்கள் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் இந்தக் காரணங்களை எடுத்துச் சொன்னார்கள். இருப்பினும் ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்ட் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டது சற்றும் எதிர்பாராத ஒன்று. இந்தச் சூழ்நிலையில் நீதிமன்றத்தையும், சட்டத்தையும் மிகவும் மதித்து பழக்கப்பட்ட தேமுதிக தலைவர், திருநெல்வேலி மாவட்ட மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தின் ஆணையை ஏற்று, நாளை (18.04.2013) வியாழக்கிழமை அன்று நேரில் ஆஜராகவுள்ளார் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications