ஏம்ப்பா, குடிச்சு சீரழியிற? தட்டிக்கேட்ட மகளை எரித்துக் கொன்ற தந்தை- மீஞ்சூர் அருகே கொடூரம்
திருவள்ளூர்: மீஞ்சூர் அருகே பெற்ற மகளையே தீ வைத்து எரித்த தந்தையை போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்து இருக்கும் கேசவபுரத்தைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர். கொத்தனார். குடிப்பழக்கம் உள்ளவர். அவரது மனைவி மேரி. அவர்களின் மகள் நித்யா(19). ஜெய்சங்கர் சம்பாதிக்கும் பணத்தில் பெரும் பகுதியை மது வாங்க செலவிடுவார். வீட்டு செலவுக்கு பணம் கொடுக்காமல் இருந்துள்ளார். இதை அவரது மனைவியும், மகளும் தட்டிக் கேட்டதுடன் கண்டித்துள்ளனர். இதனால் அவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் நித்யாவை பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டார் வந்தனர். அவர்கள் சென்ற சிறிது நேரத்தில் ஜெய்சங்கர் குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். இதைப் பார்த்த மேரியும், நித்யாவும் அவரை கண்டித்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த ஜெய்சங்கர் மனைவி மற்றும் மகளை அடித்தார். மேலும் மகள் மீது வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்தார்.
தீ எரியத் துவங்கியதுடன் நித்யா அலறினார். இதையடுத்து ஜெய்சங்கர் அங்கிருந்து ஓடிவிட்டார். அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து நித்யாவை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். முன்னதாக அவர் அளித்த மரண வாக்குமூலத்தில் தன்னை தன் தந்தை ஜெய்சங்கர் தான் தீ வைத்து எரித்தார் என்று தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து மீஞ்சூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து ஜெய்சங்கரை கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications