ஒவ்வொரு ஆண்டும் மீன் பிடிக்க 45 நாட்கள் தடை ஏன்? மீன்வள பல்கலைக்கழக துணை வேந்தர் விளக்கம்
தூத்துக்குடி: மீன்களின் இனப்பெருக்கத்திற்கு வழிவகுக்கும் நோக்கத்தில் தான் குறிப்பிட்ட சீசனில் ஆழ்கடலில் மீன் பிடிக்க தடை விதிக்கப்படுகிறது என்று மீன்வள பல்கலைக்கழக துணை வேந்தர் பாஸ்கரன் மணிமாறன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகத்தின் முதல் துணை வேந்தரான பாஸ்கரன் மணிமாறன் கடந்த 15ம் தேதி அன்று தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறுகையில்,
தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகமானது நாகப்பட்டினத்தை மையமாக கொண்டு செயல்பட்டு வருகின்றது.
பல்கலைக்கழகத்தின் கீழ் தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், நாகப்பட்டினம், பொன்னேரி மீன்வள தொழில்நுட்ப நிலையங்கள் ஆகியவை செயல்பட்டு வருகின்றது. தஞ்சாவூர், கன்னியாகுமரி பறக்கை, மாதவரம், தருவைகுளம் ஆகிய இடங்களில் மீன்வள ஆராய்ச்சி நிலையங்கள் செயல்படுகின்றன.
மீன்வளக் கல்லூரிகளுக்கு என இந்தியாவிலேயே முதன் முதலில் தமிழகத்தில் தான் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டுள்ளது. இப்பல்கலைக்கழகம் உலகத்தரம் வாய்ந்த மீன்வள ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை சுமார் 1000 கிலோமீட்டர் தூரத்திற்கு கடல் தொலைவு அமைந்துள்ளது. இதனை ஆதாரமாக கொண்டு அதிகளவு மீன் உற்பத்தி கூடங்களை நிறுவுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நீர்வள உணவுகளை பெருக்குவது தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு மீனவர்களுக்காக நிறைய பயிற்சிகள் அளிக்கப்படுவதுடன், மீன்களை பிடிப்பது தொடர்பான தொழில் நுணுக்கங்களும் கற்றுக் கொடுக்கப்படுகிறது.
கடலில் மீன்வளம் குறையாமல் பெருக வேண்டும் என்பதற்காகத்தான் ஆண்டுதோறும் ஆழ்கடலில் மீன்களை பிடிப்பதற்கு குறிப்பிட்ட காலங்களில் தடை விதிக்கப்படுகிறது. இது மீன்களின் இனப்பெருக்கத்திற்கு வழிவகுக்கும் என்ற நோக்கத்தில் தான் குறிப்பிட்ட சீசனில் மத்திய, மாநில அரசால் ஆழ்கடலில் மீன் பிடிக்க தடை விதிக்கப்படுகிறது.
மீன்வளக் கல்லூரியின் ஆராய்ச்சி திட்டத்தின் கீழ் இந்தியாவிலேயே முதன்முறையாக கடல்விரால் குறிப்பிட்ட பத்து மாத காலத்திற்குள் ஒரு கிலோ என்பதற்கு பதிலாக 4 கிலோ அளவிற்கு வளர்க்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகமானது தேசிய அளவிலும், உலக அளவிலும் மீன்வளக் கல்வி, ஆராய்ச்சி மற்றும் விரிவாக்கத் துறையினை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டுள்ளது என்றார்.
பேட்டியின்போது தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வர் சுகுமார், பேராசிரியர்கள் ஜெயராமன், சண்முகம், சாந்தகுமார், மீன்வளக் கல்லூரியின் உதவி மக்கள்தொடர்பு அதிகாரி ஜவகர்மோத்தா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
இந்த ஆண்டுக்கான தடை காலம் கடந்த 15ம் துவங்கியது. வரும் மே மாதம் 29ம் தேதி வரை தொடர்ந்து 45 நாட்கள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications