இமாச்சல பிரதேசம், பாபுவா நியூகினியாவில் நிலநடுக்கம்

பாபுவா நியூ கினியாவில் வடக்கு கடற்கரை பகுதியில் இன்று காலை 8.55 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.8க பதிவாகி இருந்தது. ஐடாபே என்ற இடத்தில் இருந்து 19 கிமீ தொலைவில் உள்ள இடத்தை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் சுமார் 3 நிமிடங்கள் நீடித்ததாகவும், அப்போது அலமாரியில் இருந்த பொருட்கள் எல்லாம் கீழே விழுந்ததாகவும் ஐடாபே ரிசார்ட் ஹோட்டலில் தங்கியிருந்த மேக்ஸ் கமாவே என்பவர் தெரிவித்தார். இந்த நிலநடுக்கம் பூமிக்கடியில் 13 கிமீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.
நிலநடுக்கம் ஏற்பட்ட உடன் சுனாமி வந்துவிடுமோ என்ற பயத்தில் மக்கள் மேட்டுப் பகுதிகளுக்கு ஓடினர். இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ, பொருட் சேதமோ ஏற்பட்டதாக இதுவரை எந்த தகவலும் இல்லை. மேலும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. ஆனால் இது போன்ற சக்தி வாய்ந்த நிலநடுக்கம் சுனாமியை ஏற்படுத்தக்கூடும் என்று பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 1998ம் ஆண்டில் பாபுவா நியூ கினியாவின் வடக்கு கடற்கரை பகுதியில் 7.0 அளவுக்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தையடுத்து சுனாமி பேரலைகள் எழுந்தன. இதில் ஐடாபே உள்ளிட்ட பல கிராமங்கள் பாதிக்கப்பட்டதில் 2,200 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக இமாச்சல பிரதேச மாநிலம் சம்பா மாவட்டத்தில் இன்று காலை 8.32 மணிக்கு ரிக்டர் அளவுகோலில் 3.9 அளவுக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் உயிர் சேதமோ, பொருட் சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை.












Click it and Unblock the Notifications