‘விண்ணைத்தாண்டி வருவாயா’: கெளதம் மேனன் மீது மோசடி புகார்- கைது செய்யத் தடை!

ஆர்.எஸ்.இன்பொடெய்ன்மென்ட் பட நிறுவன உரிமையாளர் ஜெயராமன் கடந்த 3-ந் தேதி சென்னை போலீஸ் கமிஷனரிடம் இயக்குநர் கவுதம்மேனனுக்கு எதிராக மோசடி புகார் அளித்திருந்தார்.
அந்த மனுவில் ‘விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தை இந்தி மொழியில் ‘ஏக் தீவானா தா' என்ற பெயரில் ரீமேக் செய்ய பாக்ஸ் ஸ்டுடியோ நிறுவனமும் போட்டோன் கதாஸ் நிறுவனமும் ஒப்பந்தம் செய்தன. போட்டோன் நிறுவன பங்குதாரராக இயக்குநர் கவுதம் வாசுதேவமேனன் உள்ளார். இந்தியில் இப்படம் ரூ.13.58 கோடியில் தயாரிக்கப்பட்டது. என் பங்காக அப்படத்துக்கு ரூ.1.98 கோடி முதலீடு செய்து இருந்தேன்.
ஆனால் இந்த படத்தின் மூலம் எந்த லாபத்தையும் எனக்கு தராமல் கவுதம் மேனனும் பாக்ஸ் ஸ்டுடியோ நிறுவனமும் ஏமாற்றி விட்டன. எனவே கவுதம் மேனன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று குறிப்பிட்டிருந்தார்.
இதைத் தொடர்ந்து தன்னை போலீஸ் கைது செய்யலாம் என்பதால், சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார் கவுதம் மேனன்.
இந்த மனு நீதிபதி சுப்பையா முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுப்பையா, இயக்குநர் கவுதம் மேனனை வருகிற 26-ந் தேதி வரை கைது செய்ய இடைக்கால தடை விதித்தார்.
அதே நேரம் போலீஸ் விசாரணைக்கு கவுதம் மேனன் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications