தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் முற்றுகை: ரேஷன் கார்டை திருப்பிக் கொடுக்க வந்த கிராமத்தினர்
தூத்துக்குடி: கோவில்பட்டி அருகே உள்ள கரடிகுளம் மக்கள் இன்று தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ரேஷன் கார்டுகளை திரும்ப ஒப்படைக்க முயன்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள கரடிகுளத்தைச் சேர்ந்த கிராம மக்கள் இன்று கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தங்களின் ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டையை கலெக்டரிடம் திரும்ப ஒப்படைக்க முயன்றனர்.
அதனைத் தொடர்ந்து அவர்கள் கலெக்டர் ஆசிஷ் குமாரிடம் மனு ஒன்றை அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது,
கடந்த 2011ம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலின்போது தற்போதுள்ள பஞ்சாயத்து தலைவருக்கு எதிராக நாங்கள் வாக்களித்த காரணத்தினால் வேண்டுமென்றே புறக்கணிக்கப்பட்டு வருகிறோம். எங்களை கோவிலுக்கு நுழைய விடாமல் தடுக்கின்றனர்.
பஞ்சாயத்து தலைவர் கருப்பசாமி நகை திருட்டு போன்றவற்றில் ஈடுபட்டு வருகிறார். இதில் அவர் காவல் துறையினருக்கும் உரிய பங்கு கொடுக்கிறார். இதனால் பஞ்சாயத்து தலைவரின் நடவடிக்கைகளை தட்டிக் கேட்கும் எங்கள் மீது கழுகுமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசுந்தர், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் முத்து, காவலர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் வேண்டுமென்றே பொய் வழக்கு போடுகின்றனர். இதுவரை 100க்கும் மேற்ப்பட்ட பொய்வழக்குகள் போடப்பட்டு 80 பேர் சிறைக்கு சென்று வந்துள்ளனர்.
இது மட்டுமின்றி தலைவருக்கு எதிராக பேசுபவர்களின் வீடுகள் மர்ம நபர்களால் அடித்து நொறுக்கப்படுவதுடன், பெண்கள் மானபங்கப்படுத்தப்படுகின்றனர். இது தொடர்பாக நாங்கள் காவல்துறை உயர் அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் எங்கள் உயிருக்கு பாதுகாப்பில்லாததுடன், நாங்கள் இம்மண்ணில் வாழத் தகுதியுள்ளவர்களாக மாற்றப்பட்டுள்ளோம். எனவே இதனை கண்டித்தும், இதில் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் நாங்கள் எங்களது ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டையை தங்களிடம் திருப்பி ஒப்படைக்க முடிவு செய்துள்ளோம்.
இதன்பிறகும் இதில் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் கலெக்டர் அலுவலகம் முன்பு குடியேறும் போராட்டம் நடத்துவோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனுவை பெற்ற கலெக்டர் கிராம மக்களின் ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டைகளை பெற மறுத்தார். இது தொடர்பாக எஸ்.பி.யிடம் புகார் கொடுங்கள் அவர் உரிய நடவடிக்கை எடுப்பார் என்று பதில் அளித்தது கிராமமக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications