வாடிப்பட்டி ஏ.டி.எம். காவலாளி கொலை-கொள்ளை முயற்சி: இந்த மூஞ்சியை உங்களுக்குத் தெரியுமா?
மதுரை: மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே தனிச்சியத்தில் ஸ்டேட் பேங்க் ஏ.டி.எம். மையத்தில் காவலாளி கொலை வழக்கில் கேமராவில் பதிவான குற்றவாளியின் படம் வெளியிடப்பட்டுள்ளது.
வாடிப்பட்டி அருகே உள்ள தனிச்சியம் ஸ்டேட் பேங்க் ஏ.டி.எம். மையத்தின் வாசலில் தூங்கிக் கொண்டிருந்த காவலாளி பன்னீர்செல்வத்தை கடந்த 4ம் தேதி மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்துவிட்டு ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்றனர். ஆனால், எந்திரத்தை உடைக்க முடியாததால் தப்பிவிட்டனர்.
இச்சம்பவத்தில் தொடர்புடையவர்களைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஏ.டி.எம். மையத்தில் இருந்த கண்காணிப்புக் கேமராவில் கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த 2 பேரின் உருவங்கள் பதிவாகியுள்ளன.
அதில் ஒருவன் கடப்பாரை மூலம் ஏ.டி.எம். இயந்திரத்தை உடைக்க முயற்சித்தது பதிவாகியுள்ளது. அந்த நபர் தனது முகத்தை துண்டால் மறைத்திருந்ததால் முகம் தெளிவாகத் தெரியவில்லை.
இந்த நபர்களில் ஒருவனது வலது கை ஆள்காட்டி விரல் சற்று வளைந்த நிலையில் உள்ளது.
இந்தப் படத்தில் உள்ள நபர் குறித்து தகவல் தெரிந்தால் அதை 98425-53580, 99445-06869 ஆகிய செல்போன் எண்களில் தெரிவிக்கலாம் என்று மதுரை மாவட்ட எஸ்.பி. பாலகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.
சரியான தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.5,000 சன்மானமாக வழங்கப்படும். தகவல் கொடுப்பவர்களின் விபரங்களும் ரகசியமாக வைக்கப்படும்.