மார்த்தாண்டத்தில் போதையில் எஸ்ஐக்கு 'பளார்' விட்ட துணை நடிகர் கைது
குமரி: மார்த்தாண்டத்தில் குடி போதையி்ல் எஸ்ஐயின் கன்னத்தில் அறை விட்ட துணை நடிகரை போலீசார் கைது செய்தனர்.
மார்தாண்டம் காவல் நிலையத்தில் சிறப்பு எஸ்ஐயாக பணியாற்றி வருபவர் சுந்தர்ராஜ். இரவு ரோந்து பணியின் போது மார்க்கெட் சாலை பகுதியில் போதையில் வாலிபர் ஒருவர் ரகளையில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதை கண்டார். அதை தொடர்ந்து அந்த வாலிபரை பிடித்து விசாரித்து அவரை அங்கிருந்து போகுமாறு கூறினார். அந்த வாலிபர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரின் கன்னத்தில் ஓங்கி பளாரென அறைந்தார். இது குறித்து எஸ்ஐ காவல் நிலையத்தில் தகவல் கொடுத்தார். விரைந்து வந்த போலீசார் அந்த வாலிபரை மடக்கிப் பிடித்தனர்.
பின்னர் அந்த வாலிபரிடம் மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த நபர் புதுக்கடை அருகே விழுந்தியம்பலம் குஞ்சாக்கோடையைச் சேர்ந்த சிபு என்பதும், துணை நடிகர் என்பதும் தெரிய வந்தது. மேலும் தூத்துக்குடியில் ஒரு சினிமா படப்பிடிப்பில் கலந்து கொண்டு விட்டு ஊருக்கு வந்தவர் நண்பருடன் சேர்ந்து மது அருந்தியதும் தெரிய வந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து சிபுவை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய அவரது நண்பர் குறித்தும் விசாரித்து வருகின்றனர்.