2ஜி விவகாரம்: ஜேபிக்கு இன்று ராசா பதில் அனுப்புகிறார்- திமுகவின் அடுத்த அட்டாக்!

இந்த விவகாரத்தில் தன்னை விசாரிக்க வேண்டும் என்று ராசா விடுத்த வேண்டுகோளை சாக்கோ ஏற்க மறுத்துவிட்டார். ஆனாலும் திமுக அதிகம் நெருக்கியதால், ஒரு கேள்வித் தாளை அனுப்பி, அதிலுள்ள கேள்விகளுக்கு மட்டும் பதிலளிக்கவும் என்று கேட்டிருந்தார்.
இந் நிலையில் ராசா பதில் அனுப்புவதற்கு முன்னதாகவே, தானாகவே ஜேபிசியின் வரைவு அறிக்கை என்ற பெயரில் ஒரு அறிக்கையையும் சாக்கோ தயாரித்தார். அதில் அனைவரும் எதிர்பார்த்த மாதிரியே முழுப் பழியையும் ராசா மீது போட்டிருந்தார்.
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் பிரதமரை ராசா தவறாக வழிநடத்திவிட்டார், இந்த விவகாரத்தில் பிரதமர் மன்மோகன் சிங்குக்கும், நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை, வாஜ்பாய் ஆட்சியில் ஸ்பெக்ட்ரம் விற்பனையால் நாட்டுக்கு ரூ. 40,000 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டது என்று கூறப்பட்டிருந்தது.
இந்த அறிக்கையை ஜேபிசியில் உள்ள பிற கட்சி எம்பிக்களுக்குத் தரும் முன்பே அது எதிர்பார்க்கப்பட்டதைப் போலவே வெளியே லீக்கும் ஆகிவிட்டது.
இந் நிலையில் நாடாளுமன்றத்தில் திமுக உள்ளிட்ட கட்சிகள் இந்தப் பிரச்சனைக் கிளப்பின. ஜேபிசி அறிக்கையைக் கூட ரகசியமாக வைக்கத் தெரியாத பி.சி.சாக்கோ அதன் தலைவராக இருக்க லாயக்கில்லை, இதனால் அவரை நீக்க வேண்டும் என்று திமுக கோரியுள்ளது.
இந் நிலையில் ஆ.ராசா இன்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறுகையில், 2ஜி ஒதுக்கீடு தொடர்பான என் கருத்தை நாடாளுமன்றக் கூட்டுக் குழுவுக்கு இன்று அனுப்ப உள்ளேன். ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நான் எடுத்த எல்லா முடிவுகளும் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தெரியும் என்றார்.
ராசா தனது பதிலை சாக்கோவுக்கு மட்டும் அனுப்பாமல், கூட்டுக் குழுவில் உள்ள எல்லோருக்கும் அனுப்புவார் என்று தெரிகிறது.
இதன்மூலம் நாடாளுமன்றம் நடக்கும் நேரத்தில் அவரது பதில் பிரதமருக்கும் சிதம்பரத்துக்கும் காங்கிரசுக்கும் புதிய நெருக்கடியை ஏற்படுத்தும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications