ஸ்பெக்ட்ரம் ஊழலில் மன்மோகன்சிங், சிதம்பரத்தை தப்ப விட்ட ஜேபிசி அறிக்கையை நிராகரிப்போம்: பாஜக கூட்டணி
டெல்லி: ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டு ஊழல் தொடர்பான பார்லிமென்ட் கூட்டுக் குழு தயாரித்துள்ள வரைவு அறிக்கையில் பிரதமர் மன்மோகன்சிங், நிதி அமைச்சர் ப.சிதம்பரம் விடுவிக்கப்பட்டு இருப்பதால் இந்த அறிக்கையை கூட்டுக் குழு உறுப்பினர்கள் அனைவரும் ஒட்டு மொத்தமாக நிராகரிக்க வேண்டும் என்று தேசிய ஜனநாயக கூட்டணி வேண்டுகோள் விடுத்து உள்ளது.
பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத் தொடரை எதிர்கொள்வது தொடர்பாக வியூகம் வகுக்க தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் முக்கிய தலைவர்களின் கூட்டம் பா.ஜனதாவின் மூத்த தலைவரும், முன்னாள் துணை பிரதமருமான எல்.கே.அத்வானி வீட்டில் நடைபெற்றது. இக் கூட்ட முடிவில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது.அதில், ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டு ஊழல் தொடர்பாக பார்லிமென்ட் கூட்டுக் குழு தயாரித்த வரைவு அறிக்கை வெளியே கசிந்தது ஆச்சரியமும், அதிர்ச்சியும் அளிக்கிறது. குறிப்பாக பிரதமர் மன்மோகன்சிங், நிதி அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோர் மீது அப்போதைய தொலை தொடர்பு அமைச்சர் ஆ.ராசா குற்றச்சாட்டுகள் தெரிவித்து உள்ளார். அது தொடர்பாக அவர் தன்னிடம் விசாரிக்க வேண்டும் என்று விடுத்த வேண்டுகோள் புறக்கணிக்கப்பட்டு உள்ளது.
பிரதமர் மற்றும் நிதி அமைச்சரிடம் விசாரணை நடத்தாமல், ஆ.ராசாவிடமும் விசாரணை நடத்தாமல், அவர்களை அந்தக் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவித்தது ஆச்சரியம் அளிக்கிறது. ஆகவே, அந்த அறிக்கையை அனைத்து பார்லிமென்ட் கூட்டுக் குழு உறுப்பினர்கள் ஒட்டு மொத்தமாக நிராகரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம் என அதில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அங்கிங்கெனாதபடி ஊழல்
இதனிடையே காங்கிரஸ் கட்சி ஊழல் செய்வதில் எதையும் விட்டு வைக்கவில்லை என்று பெங்களூரில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பாஜகவின் மூத்த தலைவரான சுஷ்மா சுவராஜ் சாடியுள்ளார்.
பெங்களூர் மல்லேசுவரம் விளையாட்டு மைதானத்தில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், மத்தியில் காங்கிரஸ் தலைமையான ஆட்சியில் எங்கு பார்த்தாலும் ஊழல் நடைபெறுகிறது. காங்கிரஸ் கட்சி ஊழலில் சாதனை படைத்துள்ளது. மூன்று உலகத்திலும் அதாவது அந்த கட்சி ஆகாயம், பூமி, பாதாளத்திலும் ஊழல் செய்கிறது. ஊழல் செய்வதில் காங்கிரஸ் எதையும் விட்டு வைக்கவில்லை. தீவிரவாதத்தை தடுப்பதிலும் காங்கிரஸ் அரசு தோல்வி அடைந்துவிட்டது. கர்நாடக ஜனதா கட்சிக்கு கர்நாடகத்தில் எதிர்காலம் இல்லை. அந்த கட்சியால் தனித்து ஆட்சி அமைக்க முடியாது. மத்தியில் காங்கிரஸ் அரசுக்கு ஜனதா தளம்(எஸ்) ஆதரவு அளிக்கிறது. அதனால் அந்த கட்சிக்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டாம். மாநிலத்தின் வளர்ச்சிக்கு பாரதிய ஜனதாவை ஆதரிக்க வேண்டும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications