வழக்கம் போலவே.... எதிர்க்கட்சிகள் அமளி- முடங்கியது பார்லிமென்ட்!

ஒருமாத கால இடைவெளிக்குப் பிறகு இன்று பார்லிமென்ட் கூட்டம் தொடங்கியது. காலையில் சபை கூடியதும் சபாநாயகர் மீரா குமார் ஒரு அறிக்கையை வாசித்தார். அதில் டெல்லியில் 5 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்தார். மேலும் அனைத்து உறுப்பினர்களும் இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவிக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டார். அப்போது பாஜக, திமுக உள்ளிட்ட கட்சிகளின் எம்.பி..கள் ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் ஜேபிசியின் அறிக்கை கசிந்தது பற்றி கேள்வி எழுப்பினர். இந்த விவகாரம் குறித்து கேள்வி நேரத்தை ஒத்திவைத்துவிட்டு விவாதிக்க வேண்டும் என்று பாஜக எம்.பிக்கள் வலியுறுத்தினர். முன்னதாக ஜேபிசி அறிக்கை கசிந்ததது தொடர்பாக அதன் தலைவர் பி.சி. சாக்கோவுக்கு எதிராக திமுக சார்பில் உரிமை மீறல் நோட்டீஸும் கொடுக்கப்பட்டது.
இதேபோல் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள், டெல்லியில் மமதா பானர்ஜி மற்றும் மேற்கு வங்க நிதி அமைச்சரும் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து முழக்கங்களை எழுப்பினர். மேலும் தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை பார்லிமென்ட்டை நடக்க விடமாட்டோம் என்றும் அவர்கள் குரல் எழுப்பிக் கொண்டிருந்தனர்.நிலக்கரி ஊழல் தொடர்பான சிபிஐ அறிக்கை மீது விவாதிக்க வேண்டும் என்று அதிமுக எம்.பிக்கள் வலியுறுத்தினர்.
மேலும் டெல்லியில் 5 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தையும் எதிர்க்கட்சி எம்.பிக்கள் கிளப்பி முழக்கங்களை எழுப்பினர். இதனால் சபையில் ஒரே கூச்சல் குழப்பமாக நீடித்தது. இதைத் தொடர்ந்து லோக்சபா நடவடிக்கைகள் பகல் வரை வரை ஒத்தி வைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார். பின்னர் மீண்டும் சபை கூடிய போதும் அமளி நீடித்ததால் பிற்பகல் 2 மணி வரை சபை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன.
இதேபோல் ராஜ்யசபாவில் நிலக்கரி ஊழல், ஸ்பெக்ட்ரம் விவகாரம், அதிகரித்து வரும் பலாத்கார சம்பவங்கள் பற்றி எதிர்க்கட்சி எம்.பிக்கள் முழக்கங்களை எழுப்பினர். இதனால் சபை நடவடிக்கைகள் முடங்கின. ராஜ்யசபா நடவடிக்கைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன.
முன்னதாக பார்லிமென்ட் வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மன்மோகன்சிங், எதிர்க்கட்சிகள் எழுப்பக் கூடிய அனைத்து பிரச்சனைகள் பற்றியும் விவாதிக்க மத்திய அரசு தயாராக இருக்கிறது. இதனால் சபை நடவடிக்கைகளை சுமூகமாக நடத்த எதிர்க்கட்சிக கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இருப்பினும் பிரதமரின் வேண்டுகோளை எதிர்க்கட்சிகள் நிராகரித்து அமளியில் ஈடுபட்டதால் சபை நடவடிக்கைகள் முடங்கின.












Click it and Unblock the Notifications