5 ஆண்டு பாஜக ஆட்சியில் நிகழ்ந்த தவறுகளுக்காக மன்னிச்சுடுங்க: பெங்களூரில் சுஷ்மா ஸ்வராஜ்!
பெங்களூரில் நேற்று நடைபெற்ற பிரம்மாண்ட பிரசாரக் கூட்டத்தில் பேசிய சுஷ்மா ஸ்வராஜ், நாங்கள் இப்போது பாடம் கற்றுக் கொண்டோம். நிச்சயமாக நேர்மையான நல்ல அரசை பாஜக உருவாக்கும். தென்னிந்தியாவில் கர்நாடகாவில்தான் பாஜக முதன் முதல் முறையாக ஆட்சி அமைத்தது. மக்களுக்கான நலத் திட்டங்களை பாஜக அரசு வழங்கியது. ஆனால் உட்கட்சி வேறுபாடுகளால் இருமுறை மாநில முதல்வர்களை மாற்ற வேண்டிய நிலைமை ஏற்பட்டது. இந்த விவகாரம் கட்சி மேலிடத் தலைவர்களுக்கும் கூட கடும் அதிருப்தியைத்தான் ஏற்படுத்தியது.
குழப்பத்தை ஏற்படுத்திய சிலர் கட்சியைவிட்டு வெளியேறிவிட்டனர். இப்போது நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம். சதானந்த கவுடாவும் ஜெகதீஷ் ஷெட்டரும் மக்களுக்கான நிதிநிலை அறிக்கைகளை தாக்கல் செய்திருக்கின்றனர். பாஜகவை மீண்டும் ஆட்சியில் அமர்த்த வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். பாஜகவுக்கு மாற்றாக எந்த ஒரு கட்சியுமே இல்லை. பாஜக ஆட்சியில் நிகழ்ந்த தவறுகளுக்காக நான் மன்னிப்பு கோருகிறேன்.
கர்நாடக ஜனதா கட்சிக்கு எந்த ஒரு எதிர்காலமும் இல்லை. காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரையில் ஊழலில் மூழ்கிப் போய்கிடக்கிறது. பூமியில் காமன்வெல்த் ஊழல், ஆகாயத்தில் ஸ்பெக்ட்ரம் ஊழல், பூமிக்கு அடியில் நிலக்கரி ஊழல் என திரும்பிய திசையெங்கும் ஊழல்.. பாகிஸ்தானுக்கு எதிராக தீவிர நடவடிக்கைகளை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசால் மேற்கொள்ள முடியவில்லை. ஆனால் வெளியுறவுத் துறை அமைச்சரோ பாகிஸ்தான் பிரதமருடன் அஜ்மீரில் விருந்து சாப்பிடுகிறார்.
கர்நாடகாவில் 7 பாஜக தலைவர்கள் இருக்கிறார்கள். அவர்களது தலைமையின் கீழ் கர்நாடக பாஜக ஒளிரும். ஜெகதீஷ் ஷெட்டர், சதானந்த கவுடா, அனந்த் குமார், ஈஸ்வரப்பா, பிரகலாத் ஜோஷி, ஆர். அசோக், கோவிந்த் கஜ்ரோல் ஆகியோர் சூரியக் கடவுளுக்கு எப்ப்படி 7 குதிரைகள் இருக்கின்றனவோ அது போல் கர்நாடக பாஜகவின் 7 குதிரைகளாக திகழ்கின்றனர் என்றார் அவர்.