கோடை வெயில்: அகஸ்தியர் அருவியில் குவியும் சுற்றுலாப் பயணிகள்
நெல்லை: கோடை வெயிலிலும் தண்ணீர் குறையாமல் கொட்டுவதால் பாபநாசம் அகஸ்தியர் அருவிக்கு சுற்றுலாப் பயணிகள் படையெடுத்து வருகின்றனர்.
நெல்லை மாவட்டத்தில் கடந்த இரு மாதங்களாக கத்தரியை மிஞ்சும் வெயில் கொளுத்தி வருகிறது. போதிய மழை இல்லாததால் நீர் நிலைகள் வறண்டு காணப்படுகிறது. பல இடங்களில் குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் நீர் நிலைகளை தேடி அலைந்து வருகின்றனர். நெல்லை மாவட்ட மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பல அருவிகள் உள்ளன. களக்காடு மலைப் பகுதிகளில் உள்ள அருவிகளில் மழைக்காலங்களில் மட்டுமே தண்ணீர் கொட்டும். குற்றால அருவிகளில் சீசன் காலங்களில் மட்டுமே தண்ணீர் விழும். ஆனால் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவி, பாணதீர்த்த அருவி போன்றவைகளில் ஆண்டு முழுவதும் தண்ணீர் விழும்.
பாணதீர்த்த அருவிக்கு பாபநாசம் அணை வழியாக செல்ல படகு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதால் அங்கு குளிக்க அனுமதியில்லை. தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் அகஸ்தியர் அருவியில் குளிக்க மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து கூட்டம் அலைமோதி வருகிறது. ஆனால் இங்கு சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு தேவையான அடிப்படை வசதிகள் இல்லாததால் ஆண்களும், பெண்களும் ஒரே இடத்தில் குளிக்கின்றனர். இதனால் பிரச்சனை ஏற்படும் கட்டத்தில் அகஸ்தியர் அருவி உள்ளது.












Click it and Unblock the Notifications