மத்திய பிரதேசத்தில் கற்பழிக்கப்பட்ட 4 வயது சிறுமியின் நிலைமை கவலைக்கிடம்
நாக்பூர்: மத்திய பிரதேசத்தில் கற்பழிக்கப்பட்ட 4 வயது சிறுமியின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
மத்திய பிரதேசம் மாநிலம் சியோனி மாவட்டம் கன்சாவ்ர் கிரமாத்தைச் சேர்ந்தவர் காஸ்ஸி யாதவ். கட்டிடத் தொழிலாளி. அவரது மனைவி ராம்குமாரி. அவர்களின் 4 வயது மகள் ராணி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). ராணியின் சகோதரர் ஷ்யாமுக்கு தெரிந்தவர் பெரோஸ் கான்(35). அவர் அடிக்கடி வீட்டுக்கும் வந்து செல்வதுண்டு. இந்நிலையில் கடந்த 17ம் தேதி மாலை ராணியுடன் பெரோஸ் பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்த ராம்குமாரிக்கு எந்த சந்தேகமும் வரவில்லை.
பின்னர் பெரோஸ் ராணியையும், அவரது தம்பியையும் பிஸ்கட் வாங்கித் தருவதாகக் கூறி கடைக்கு அழைத்துச் செல்வது போன்று சென்று சிறுமியை கற்பழித்துவிட்டார். கடைக்குப் போன மகன் வந்த பிறகும் ராணி வராததால் ராம்குமாரி கவலை அடைந்தார். பின்னர் சிறுமி கிராம மயானத்தில் கிடப்பதை ஷ்யாம் பார்த்தார். உடனே அவரை உள்ளூர் மருத்துவச்சியிடம் கொண்டு சென்றபோது அவர் பார்த்துவிட்டு ரத்தப் போக்கு அதிகமாக உள்ளது வெளியூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லுங்கள் என்றார்.
இதையடுத்து ராணி ஜபல்பூரில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் மாநில அரசு ராணியை விமானம் மூலம் நாக்பூர் கொண்டு சென்றது. தற்போது ராணி நாக்பூர் கேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார். மூளையில் காயம்பட்ட அவரின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையே போலீசார் பெரோஸ் கானைத் தேடி அவரது சொந்த மாநிலமான பீகாருக்கு சென்றுள்ளனர்.












Click it and Unblock the Notifications