திருப்பூரில் கற்பழிக்கப்பட்ட 8 வயது சிறுமியின் சிகிச்சைக்கு உதவ ரெடி: கேரள முதல்வர் உம்மன் சாண்டி
திருவனந்தபுரம்: திருப்பூர் அருகே கற்பழிக்கப்பட்ட கேரள மாநிலத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமியின் சிகிச்சைக்கு உதவ தயாராக இருப்பதாக கேரள முதல்வர் உம்மன் சாண்டி தெரிவித்துள்ளார்.
திருப்பூர் அருகே வீட்டில் தனியாக இருந்த 8 வயது சிறுமி பக்கத்து வீட்டுக்காரரால் கற்பழிக்கப்பட்டார். கேரள மாநிலத்தைச் சேர்ந்த சிறுமியின் தாயார் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனி ஒன்றில் வேலை பார்க்கிறார். வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய அவர் தனது மகள் சுயநினைவின்றி இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது பரிசோதனையில் அவர் கற்பழிக்கப்பட்டது தெரிய வந்தது.
இதையடுத்து சிறுமியின் தாய் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அவரது புகாரின்பேரில் போலீசார் பக்கத்து வீட்டுக்காரரான கண்ணன் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் இந்த பிரச்சனை குறித்து நேற்று கேரள சட்டசபையில் பேசப்பட்டது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் அச்சுதானந்தன் சட்டசபையில் இந்த பிரச்சனையை எழுப்பினார். ஆதரவற்ற ஏழை குடும்பத்தைச் சேர்ந்த சிறுமியை கேரளாவுக்கு அழைத்து வந்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
இதற்கு பதில் அளித்த கேரள முதல்வர் உம்மன் சாண்டி கூறுகையில்,
சிறுமியின் சிகிச்சைக்கு உதவ கேரள அரசு தயாராக உள்ளது. இது குறித்து தமிழக அரசை தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
உடல்நிலையில் முன்னேற்றம்:
கோவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுமியின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. சிறுமிக்கு மனரீதியாக ஏற்பட்டுள்ள பாதிப்பை சரி செய்ய கவுன்சிலிங் வழங்க மருத்துவமனை நிர்வாகம் முடிவு செய்துள்ளது.












Click it and Unblock the Notifications