பழைய திட்டங்களையே இன்னும் செயல்படுத்தவில்லை, இதுல புது அறிவிப்புகள் வேற...: கருணாநிதி
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி பெறப்பட்ட தகவல்களின்படி சென்னை மாநகராட்சியில் 2012-13-ம் ஆண்டில் வார்டு கவுன்சிலர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்ட பெரும்பாலான பணிகள் முடிக்கப்படவில்லை என தெரிய வந்துள்ளது.
கடந்த ஆண்டில் திட்டமிடப்பட்ட 640 பணிகளில் 617-க்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது. அதில் 597 பணிகளுக்கு டெண்டர் கோரப்பட்டன. 397 பணிகளுக்கு டெண்டர் இறுதி செய்யப்பட்டு, அதில் 77 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. 215 பணிகள் தொடங்கப்படவே இல்லை. இந்நிலையில் 2013-14-ம் ஆண்டுக்கான புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தஞ்சாவூர் அரண்மனையில் இருந்த மரகத லிங்கங்கள் கொள்ளை போனதாக வந்துள்ள செய்திகள், அதிமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கிற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
கும்பகோணம், விழுப்புரம், மதுரை நகரங்களை தலைமையிடமாகக் கொண்டுள்ள போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி வந்த நிர்வாக இயக்குநர்கள், கடந்த மார்ச் 31ம் தேதி ஓய்வு பெற்றுள்ளனர். ஆனால் புதிய இயக்குநர்கள் இதுவரை நியமிக்கப்படவில்லை என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.