சொத்து பிரச்சனை: நீதிமன்றத்திற்கு வந்த வீரபாண்டி ஆறுமுகம் குடும்பம்
மறைந்த முன்னாள் திமுக அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்திற்கு 2 தாரம். முதல் மனைவி ரெங்கநாயகி மூலம் அவருக்கு 2 மகன்கள் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகன் நெடுஞ்செழியன் திமுக மாவட்ட செயலாளராக இருந்தார். அவர் உடல்நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார். 2வது மகன் ராஜா கடந்த திமுக ஆட்சியில் எம்.எல்.ஏ.வாக இருந்தார்.
2வது மனைவி லீலா மூலம் வீரபாண்டி ஆறுமுகத்திற்கு பிரபு என்ற மகன் உள்ளார். அவர்கள் சென்னையில் வசிக்கின்றனர். வீரபாண்டி ஆறுமுகம் உயிருடன் இருக்கும் வரை எழாத சொத்து பிரச்சனை அவர் மறைவிற்குப் பிறகு தற்போது எழுந்துள்ளது.
வீரபாண்டி ஆறுமுகத்தின் முதல் மனைவி ரெங்கநாயகி, மூத்த மருமகள் பிருந்தா செழியன் ஆகியோர் சேலம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர்.
அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது,
வீரபாண்டி ஆறுமுகம், 2007 செப்டம்பர் 6ல், அழகாபுரத்தை சேர்ந்த கிருஷ்ண அய்யர் மகன் ஜனார்த்தன ராவிடம் இருந்து, 97.5 சென்ட் நிலத்தையும், ஜனார்த்தன ராவின் சகோதரர் கங்காராமிடம் இருந்து, 50.5 சென்ட் நிலத்தையும் வாங்கி ரெங்கநாயகி, பிருந்தா செழியன் ஆகியோர் பெயரில் சூரமங்கலம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்தார். இந்நிலையில் 2011 டிசம்பர் 23ம் தேதி ரெங்கநாயகி, பிருந்தா செழியன் ஆகிய இருவரையும், சூரமங்கலம் சார்பதிவாளர் அலுவலகத்துக்கு கடத்திச் சென்று இந்த இரண்டு சொத்துக்களில் பங்கு, மேலும் எட்டு சொத்துக்களை, தன் பெயருக்கு பெற்றுக் கொள்வதாக மிரட்டி, இருட்டில் கையெழுத்து வாங்கிக் கொண்டார்.
ரெங்கநாயகி, தன் கணவருக்கு தானமாக கொடுப்பதாகவும், மருமகள் பிருந்தா செழியன் அந்த நிலத்தை, 37.66 லட்சம் ரூபாய்க்கு, வீரபாண்டி ஆறுமுகத்துக்கு விற்பனை செய்துள்ளதாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிருந்தா செழியன், தன் பங்கை விற்பனை செய்ததற்காக ஐந்து காசோலைகளை, வீரபாண்டி ஆறுமுகம், பல்வேறு தேதிகளில் வழங்கினார். அதில், நான்கு காசோலைகளை தலா, 9 லட்சம் ரூபாய்க்கும், ஐந்தாவது காசோலையை 1.66 லட்சம் ரூபாய்க்கும் வழங்குவதாக தெரிவித்த போதிலும், அதை வழங்கவில்லை. சொத்துக்களை, பிருந்தா செழியன் விற்பனை செய்த நிலையில், அவருக்கான எந்த பலனையும் (பணமோ, நிலமோ) வீரபாண்டி ஆறுமுகம் கொடுக்கவில்லை.
இதனால், அந்த சொத்து பதிவை ரத்து செய்ய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். முதல் மனைவி ரெங்கநாயகியின் இரண்டாவது மகன் ராஜா உயிருடன் உள்ள நிலையில் அவரின் பங்கை கொடுக்காமல் இரண்டாவது மனைவி லீலா, அவர் மகன் பிரபு, முதல் மனைவியின் மகள்கள் மகேஸ்வரி, நிர்மலா, செழியனின் மகள்கள் சூர்யா, சிந்து, ராஜாவின் மகள்கள் கிருத்திகா, மலர்விழி ஆகியோருக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளது.
இந்த தான சொத்து பரிமாற்ற பதிவு செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று அவர்கள் அதில் தெரிவித்துள்ளனர்.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதி பாஸ்கரன் இது குறித்து எதிர்தரப்பு வரும் ஜூன் 13ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.