சாரதா சிட்பண்ட் மோசடியில் சிக்கிய 'நம்.2 தேப்ஜனி' சரணடைய விரும்பினாராம்...
யார் இந்த தேப்ஜனி முகோபாத்யா?
சாரதா சிட் பண்ட் நிறுவனத்தில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ரிசெப்னிஸ்ட்டாக பணிக்கு சேர்ந்தவர் தேப்ஜனி முகோபாத்யா.. இப்போது இவர்தான் சாரதா குழுமத்தின் நம்பர் 2. இந்த தேப்ஜனிதான் இப்போது சாரதா குழுமத்தின் எக்ஸ்கியூட்டிவ் டைரக்டர்... தேப்ஜனி ஒரு சாதாரண ஊழியராக இருந்த காலத்தில் இருந்தே சாரதா குழுமத்தின் உரிமையாளர் சுதிப்தா சென் பொதுநிகழ்ச்சிகளில் தமக்கு அடுத்த இருக்கையில்தான் அமர வைப்பார். தேப்ஜனி முகோபாத்யா தற்போது இருக்கும் அபார்ட்மெண்ட் மதிப்பு ரூ80 லட்சமாக இருக்கலாம்.. என்று கூறும் அவரது உறவினர்கள், சுதீப்தா சென் அவருக்கு "அன்பளிப்பாக" கொடுத்திருக்கலாம் என்று கூறுகிறார்.
சம்பளமே கொடுக்கலையாம்..
ஜம்மு காஷ்மீரில் சுதீப்தா சென்னுடன் சேர்த்து தேப்ஜனி முகோபாத்யாவும் கைது செய்யப்பட்டிருக்கிறார். ஆனால் அவரது குடும்பத்தினர் சொல்கின்ற கதையோ வேறாக இருக்கிறது. தேபாஜனிக்கு கடந்த 6 மாதங்களாக ஊதியம் கொடுக்கப்படவில்லை. இதனால் அவரது மாருதி ஸ்விப்ட் காருக்கான 'மாத இன்ஸ்டால்மென்ட்' கட்டப்படவில்லையாம். இதனால் எக்ஸ்கியூட்டிவ் டைரக்டர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்யும் முடிவில் இருந்தாராம் தேப்ஜனி. மேலும் தமது ராஜினாமா கடிதத்தையும் நிறுவனத்திடம் கொடுத்துவிட்டார்.
ஸ்ரீநகரில் சிக்கினார்
இந்நிலையில் ஏப்ரல் 9-ந் தேதியன்று நிர்வாகக் குழுக் கூட்டத்துக்கு டெல்லி வருமாறு தேப்ஜனியை சுதீப்தா சென் அழைத்திருக்கிறார். இதனால் ஏப்ரல் 10-ந் தேதியன்று டெல்லிக்குப் போனார் தேப்ஜனி. அதன் பின்னர் ஏப்ரல் 22-ந் தேதியன்று தம்மை தொடர்பு கொண்டதாகக் கூறும் அவரது வழக்கறிஞர் அபிஷேக் முகர்ஜி, அவர் தங்கியிருந்த ஹோட்டல் வெயிட்டர் ஒருவரது போனில் இருந்து பேசினார். அப்போது தாம் போலீசில் சரணடைய விரும்புவதாகக் கூறினார். ஆனால் அன்று மாலையே ஜம்மு காஷ்மீர் போலீசாரால் தேப்ஜனி கைது செய்யப்பட்டார் என்று தெரியவந்தது என்றார்.