திருவள்ளூரில் விஷவாயு தாக்குதல்- வெளிமாநில தொழிலாளர் இருவர் உட்பட மூவர் பலி
திருவள்ளூர்: திருவள்ளூர் நகராட்சியில் குழாய் அமைக்கும் பணிக்காக பாதாள சாக்கடைக்குள் இறங்கிய மேற்கு வங்க மாநிலத் தொழிலாளர்கள் இருவர் உட்பட 3 பேர் விஷவாயு தாக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
திருவள்ளூர் நகராட்சியில் சென்னை - திருத்தணி சாலையில் பாதாள சாக்கடை இருந்ததால் நள்ளிரவு நேரத்தில் குழாய் இணைக்கும் பணி நடந்தது. இன்று அதிகாலை 1.30 மணி அளவில் பாதாள சாக்கடை மூடியை தொழிலாளர்கள் அகற்ற்விட்டு முதலில் சாக்கடை ஆழத்தை கணக்கிட மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சேர்ந்த திலிப் என்பவர் இறங்கினார். அவர் நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை.
இதனால் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மற்றொரு தொழிலாளி பிந்து என்பவர் இறக்கிவிடப்பட்டார். அவரும் நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. இதைத் தொடர்ந்து மேல்மலையனூர் முருகன் என்ற தொழிலாளி இறக்கிவிடப்பட்டு வெகுநேரமாகியும் அவரும் வெளியே வரவில்லை. இதனால் அதிர்ச்சிய அடைந்த மற்றவர்கள் உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் கவச உடை அணிந்து சாக்கடைக்குள் இறங்கிய போது மூவரும் பிணமாக கிடந்தது தெரியவந்தது.
3 பேர் உடல்களையும் தீயணைப்பு வீரர்கள் மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விஷ வாயு தாக்கி 3 பேரும் பலியாகி இருக்கலாம் என கருதப்படுகிறது.