விடுதலை கோரி செங்கல்பட்டு முகாமில் ஈழத்தமிழர்கள் 9 வது நாளாக பட்டினிப் போராட்டம்!
செங்கல்பட்டு: செங்கல்பட்டு சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருக்கும் தங்களை விடுதலை செய்யக் கோரி ஈழத் தமிழர்கள் 9வது நாளாக பட்டினிப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
செங்கல்பட்டு சிறப்பு முகாமில் உள்ள ஈழத்தமிழர்கள் பல ஆண்டுகளாக தங்களை விடுவிக்க வேண்டும், திறந்த வெளி முகாமுக்கு மாற்றவேண்டும், குடும்பத்துடன் தாங்கள் வாழ வேண்டும் என்ற கோரிக்கை வைத்து அவ்வப்போது உண்ணா நிலை போராட்டம் நடத்தி வருகின்றனர். இது பல ஆண்டுகளாக தொடந்து வருகிறது. இந்தப் போராட்டத்துக்கு ஆதரவாக பல கட்சிகளும் சிறப்பு முகாம்களை மூட வேண்டும் என்ற கோரிக்கை வைத்து போராட்டம் நடத்துகின்றன.
இந்நிலையில், கடந்த 18-ந் தேதியில் இருந்து செங்கல்பட்டு சிறப்பு முகாமை சேர்ந்த ஈழ நேரு, செல்லக்குமார் மற்றும் சிறிகாந்தன் ஆகியோர் தொடர் பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 3 நாட்களுக்கு பின் காவல்துறை அவர்களை வலுக் கட்டாயமாக அரசு பொது மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றது அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தது. எனினும் மருத்துவமனையிலும் மூன்று தமிழர்களும் தங்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். இதில் சிறிகாந்தன் என்பவர் மாற்றுத் திறனாளி ஆவார். அவருக்கு ஒரு கையும் ஒரு காலும் செயல் இழந்துள்ளது என்பது குறிப்பிடத் தக்கது. இவர்களுடைய போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிட்து சிறப்பு முகாமில் உள்ள 13 தமிழர்கள் அங்குள்ள மரத்தின் மீதி ஏறி போராட்டம் செய்தனர். மருத்துவமனையில் உள்ளவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுமாறு மரத்தில் உள்ளவர்கள் வலியுறுத்தினர். 26 மணி நேரத்திற்கு மேலாக அவர்கள் மரத்தின் மீதே தொடர்ந்தும் அமர்ந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications