டெல்லி பயங்கரம்: கழிவறையில் 6 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொல்ல முயற்சி: 23 பேர் கைது!
டெல்லி: டெல்லியில் கழிவறையில் 6 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்ய முயன்றது தொடர்பாக 23 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
உத்தரபிரதேசத்தை சேர்ந்த பலூன் வியாபாரி தெற்கு தில்லி பதர்பூர் பகுதியில் உள்ள தேசிய அனல் மின் நிறுவனம் அருகே உள்ள குடிசைப் பகுதியில் 25 ஆண்டுகளாகக் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது 6 வயது மகள் வெள்ளிக்கிழமை பிற்பகலில் அந்தப் பகுதியில் உள்ள பொதுக் கழிப்பறைக்குச் சென்றார்.
அங்கு அந்தச் சிறுமி பிளேடால் கொடூரமாகத் தாக்கப்பட்டார். ஆடைகள் கிழிக்கப்பட்டிருந்த நிலையில் மயங்கி கிடந்த சிறுமியைக் கண்ட வழிப்போக்கர் ஒருவர் போலீசில் தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து சிறுமியை மீட்ட போலீசார், எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்த்தனர். இதைத் தொடர்ந்து, அந்தச் சிறுமிக்கு எய்ம்ஸ் மருத்துவமனையில் மூன்று மணி நேரம் உயிர் காக்கும் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஆடைகள் கிழிக்கப்பட்ட நிலையில் இருந்த அந்த சிறுமி பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கப்பட்டிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகம் அடைந்துள்ளனர்.
சிறுமியின் வயிற்றுப் பகுதியில் பலத்த காயமும், கழுத்தில் பிளேடால் கீறப்பட்ட காயமும் இருந்தன. இதையடுத்து, அந்தச் சிறுமிக்கு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
மலம் வெளியேறுவதற்காக சிறுமியின் பெருங்குடலில் சிறப்பு அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது. மேலும், தொற்று ஏற்படாமல் இருக்க தேவையான சிகிச்சையும் அளிக்கப்பட்டது. மூன்று மணி நேர உயிர் காக்கும் அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு சிறுமியின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது" என்று எய்ம்ஸ் மருத்துவமனையின் விபத்துக் காயப் பிரிவின் தலைமை மருத்துவர் எம்.சி. மிஸ்ரா கூறியுள்ளார்.
"சிறுமியின் கழுத்தில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்ட ஆழமான காயம் இருந்தது. உடல் ஆடை களையப்பட்டிருந்தது' என்று சிறுமியின் மாமா போலீசில் புகார் தெரிவித்தார்.
சிறுமி தாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, பதர்பூரைச் சேர்ந்த பொதுமக்களும், சிறுமியின் உறவினர்களும் மெஹ்ரௌலி - பதர்பூர் சாலையில் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அந்தப் பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பொதுமக்களிடம் பேச்சு நடத்தி மறியலைக் கைவிடச் செய்தனர்.
சிறுமி தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பொதுக் கழிப்பறையின் ஒப்பந்ததாரர் உள்பட 22 பேரைப் பிடித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
டெல்லியில் அடுத்தடுத்து சிறுமிகள் பலாத்காரத்திற்கு ஆளாகும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications