பொட்டு சுரேஷ் கொலை: அட்டாக் கூட்டாளி அரெஸ்ட்

பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் தொடர்புடைய 18 பேரில் 16 பேர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு விட்டனர். கடைசியாக அட்டாக் பாண்டியையும், அவரது நெருங்கிய கூட்டாளியுமான பிரவீண் குமாரையும் போலீஸார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் பிரவீண்குமார் சென்னை அருகே பதுங்கியிருப்பதை அறிந்து தனிப்படை போலீசார் அங்கே சென்று அவரை கைது செய்தனர்.
பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ள ஆரோக்கியபிரபுவின் தம்பிதான் இந்த பிரவீண். அண்ணன் தம்பிகள் இருவரும் அட்டாக் பாண்டியின் அக்காள் மகன் திருச்செல்வத்தின் நண்பர்கள். எனவே திருச்செல்வம் மூலமாக அட்டாக் பாண்டியின் வீட்டுக்கும் நெருக்கமானார் ஆரோக்கியபிரபு. அண்ணனுடம் சென்ற பிரவீணும் அட்டாக் பாண்டியுடன் ஐக்கியமானார்.
அவனியாபுரம் அருகே இருந்த அட்டாக் பாண்டியின் கிரஷரில் வரவு-செலவு எல்லாவற்றையும் கவனித்தவர் பிரவீண் குமார் தான். அட்டாக் பாண்டியின் கேஷியராக இருந்த அவருக்கும் கொலையில் முக்கிய பங்கு உண்டு என்கிறார்கள்.
அட்டாக்கின் நம்பிக்கை
தன் மருமகன் திருச்செல்வத்தைவிட இவர்கள் மீது தான் அதிக நம்பிக்கை வைத்திருந்தார் அட்டாக் பாண்டி. அட்டாக் பாண்டியைப் பார்க்க இவர்களை தொடர்பு கொண்டால்தான் முடியுமாம். துரைதயாநிதியே, ஆரோக்கியபிரபுவை தொடர்பு கொண்டு தான், அட்டாக் பாண்டியுடன் பேசினாராம்.
2 நாட்களுக்கு முன்பே கைது
கடந்த 2 நாட்களுக்கு முன்பே பிரவீண் பிடிபட்டுவிட்டதாகவும், அவரை தனி இடத்திற்கு கொண்டு சென்று போலீஸார் விசாரித்ததாகவும் சொல்கிறார்கள். ஆனால், இன்று தான் அவர் கைது செய்யப்பட்டதை பதிவு செய்துள்ளனர். பிரவீண் பிடிபட்டதை அடுத்து விரைவில் அட்டாக் பாண்டியையும் பிடித்து விடுவோம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர் மதுரை போலீசார்.
இன்று மாலைக்குள் அவர் மதுரை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, ரிமாண்ட் செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications