கணவனின் பரம்பரை சொத்திலும் விவாகரத்து பெறும் மனைவிக்கு பங்கு உண்டு: வருகிறது புதிய சட்டம்
டெல்லி: கணவன் சம்பாதித்த சொத்துக்களில் மட்டுமல்லாது, அவரது பூர்வீக சொத்துக்களிலும் சரிபங்கு விவாகரத்து பெறும் மனைவிக்கு அளிக்கப்பட வேண்டும் என்ற புதிய சட்ட சீர்திருத்தத்தைக் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
திருமண சட்டத்தில் இந்த புதிய திருத்தம் குறித்த மசோதா, நாளை, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, அது குறித்த விவாதம் நடைபெறும். கணவனின் பூர்வீக சொத்தில் வேறு எவருக்கேனும் பங்கிருந்து அதைப் பிரிக்கமுடியாத பட்சத்தில், கணவனின் பங்கு கணக்கிடப்பட்டு அதில் சரிபாதி மதிப்பிற்குரிய தொகை மனைவிக்கு அளிக்கப்பட வேண்டும்.
இது கணவனின் சொத்து திருமணத்திற்கு முன்னாலோ அல்லது பொதுவாகவோ நிர்வகிக்கப்பட்டாலும், மனைவிக்கும் அதில் சரிபங்கு தரப்படவேண்டும் என்பதை தெளிவாக்குகின்றது. தற்போதுள்ள சட்ட விதிகளில் காணப்படும் குடியிருப்பு சொத்து என்ற வார்த்தை, தம்பதியர் குடியிருக்கும் சொந்த வீடு மட்டும் என்ற முரண்பாடான அர்த்தத்தை ஏற்படுத்துவதாக கருதப்பட்டு வருகின்றது.
ஆகவே, கணவனின் அனைத்து சொத்திலும் மனைவிக்குப் பங்கு உண்டு என்று அரசு இந்தப் புதிய திருத்தத்தின் மூலம் மறுவரையறை செய்ய இருக்கிறது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் இந்த சட்ட சீர்திருத்தம் குறித்து அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேலும், பொதுமக்களிடமிருந்து வந்த தொடர்வேண்டுகோளும், அரசு இந்த திருத்தத்தைக் கொண்டுவரக் காரணமாக இருந்தது. இதன் விவாதம், நாளை நடைபெற்று, பின்னர், அதுகுறித்த விதிமுறைகள் நடைமுறைக்கு கொண்டுவரப்படும் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications