போலீசுக்கு போன மூத்த மகன் குடும்பம்- தகராறை தீர்த்து வைத்த கருணாநிதி!

பிரச்சனை என்ன?
கடந்த சில நாட்களுக்கு முன்பு திமுக தலைவர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க. முத்துவின் மனைவியான சிவகாமசுந்தரி சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் ஒரு மனுவைக் கொடுத்திருந்தார். அதில், தாங்கள் குடியிருந்து வந்த கோபாலபுரம் வீட்டை மகன் அறிவுநிதி அபகரித்துக் கொண்டு வாடகைக்கு விட்டிருப்பதாகவும் அந்த வாடகை பணத்தை தராததால் தாங்கள் சிரமத்துக்குள்ளாகிறோம் என்றும் புகார் கூறியிருந்தார். தமது கணவர் மு.க. முத்துவை அறிவுநிதி மிரட்டுவதாகவும் அதில் கூறியிருந்தார். ஆனால் இந்தக் குற்றச்சாட்டை மு.க. முத்து மறுத்து ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில், தமது மனைவிக்கு மறதி நோய் என்றும் இதில் வேறு யாரும் தலையிட வேண்டாம் என்றும் கூறப்பட்டிருந்தது.
போலீஸ் நடவடிக்கை
ஆனால் இது தொடர்பாக மு.க. முத்துவிடம் சென்னை போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்திய போது, அறிவுநிதி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியதாகத் தெரிகிறது. இதனால் அறிவுநிதியை கைது செய்யவும் போலீசார் முடிவு செய்து மேலதிகாரிகளின் உத்தரவுக்காக காத்திருந்தனர். அறிவுநிதியும் முன்ஜாமீன் கோரவும் முடிவு செய்ய திட்டமிட்டிருந்தார்.
கருணாநிதி தலையீடு
இந்த சூழலில் மு.க. முத்து, சிவகாமசுந்தரி, அறிவுநிதி ஆகியோரை கோபாலபுரம் வீட்டுக்கு கருணாநிதி வரவழைத்து பிரச்சனை குறித்து கேட்டிருக்கிறார். பின்னர் மு.க.முத்து- சிவகாமசுந்தரிக்கு மாதந்தோறும் குடும்ப செலவுக்கு குறிப்பிட தொகை தருமாறு அறிவுநிதியிடம் கூறியிருக்கிறார் அவர். இதை அறிவுநிதியும் ஒப்புக் கொண்டதாக தெரிகிறது. கருணாநிதியின் இந்த சமாதான படலத்தைத் தொடர்ந்து அறிவுநிதி மீதான புகாரை அனேகமாக மு.க. முத்துவின் மனைவி திரும்பப் பெறலாம் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications