கோவை தனியார் கல்லூரி பேராசிரியர்கள் மீது ஆசிட் வீச்சு… 4 பேர் காயம்
கோவை: கோவையில் தனியார் கல்லூரியில் பேராசிரியர்கள் மீது லேப் அசிஸ்டெண்ட் ஒருவர் ஆசிட் வீசி விட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் விலங்கியல் பேராசிரியராக பணிபுரிந்து வருபவர் லட்சுமணசாமி. இவர் நேற்று மதியம் விலங்கியல் ஆய்வு கூடத்தில் நடைபெற்ற செய்முறை தேர்வில் கண்காணிப்பாளராக வேலை செய்து கொண்டிருந்தார். ஆய்வக உதவியாளராக பீளமேட்டை சேர்ந்த முத்துசாமி பணியாற்றினார்.
அப்போது முத்துசாமி திடீரென லட்சுமணசாமியின் மீது சல்பியூரிக் ஆசிட்டை வீசினார். இதில் அவரது உடல் முழுவதும் வெந்தது. ஆனால், எவ்வித பதட்டமும் இல்லாமல் நடந்து சென்ற முத்துச்சாமி முத்துசாமி, மீண்டும் ஆய்வகத்துக்குள் சென்று, இன்னொரு பாட்டிலில் இருந்த, "சல்ப்யூரிக்' அமிலத்துடன், அருகில் இருந்த அறைக்குள் சென்றார். அங்கு அமர்ந்திருந்த பேராசிரியர்கள், ரவிசங்கர், 45, பினுக்குமாரி, 40, மணிமேகலை, 45 ஆகியோர் மீது வீசினார்; வலியால், நான்கு பேராசிரியர்களும் துடிதுடித்தனர்.
தற்கொலை முயற்சி
சூழ்நிலையை உணர்ந்த அதிர்ச்சியடைந்த ஊழியர்கள், காயம்பட்டவர்களை, தனியார் மருத்துவமனைகளில் சேர்த்தனர். இதனையடுத்து பொட்டாசியம் தயோ சயனை என்ற ராசாயன பொருளை முத்துசாமி சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
பினுகுமாரி,மணிமேகலை ஆகிய இரு பேராசிரியைகளுக்கும் லேசாக காயம் ஏற்பட்டது. இவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பினர்.
பேராசிரியர்கள் லட்சுமணசாமி, ரவிக்குமார் ஆகிய இருவருக்கும் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முத்துசாமி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.
சம்பவம் குறித்து துடியலூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி வளாகத்தில் நடந்த இந்த சம்பவங்கள் அங்கிருந்த சிசி டிவி கேமராவில் பதிவானது.பதிவான காட்சிகளை காவல் துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
முன்விரோதம் காரணம்
ஆய்வகத்தில் பணிபரியும் முத்துசாமி, 27 ஆண்டுகளாக, இக்கல்லூரியில் பணியாற்றி வருவதாகவும், சமீப காலமாக, விலங்கியல் துறையில் பணியாற்றும் பேராசிரியர்கள் சிலருக்கும், இவருக்கும், கருத்து வேற்றுமை ஏற்பட்டதாகவும், அதன் எதிரொலியாகவே, இச்சம்பவம் நடந்து இருக்கலாம் என்றும், போலீசார் தெரிவித்தனர்.
கல்லூரியில் பணியாற்றி வரும் முத்துசாமி ஆசிரியர் அல்லாதோர் சங்கத்தின் பொறுப்பாளராக பணியாற்றி வருவதாகவும் முன்விரோதம் காரணமாக திட்டமிட்டே இந்த சம்பவம் நடந்து இருப்பதாகவும் கல்லூரி தாளாளர் ஆறுச்சாமி தெரிவித்தார்.
கல்லூரி வளாகத்தில் உதவிப் பேராசிரியர்கள் மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications