உங்கள் முகம் ஸ்டாம்ப் ஆகணுமா? ‘எனது அஞ்சல் தலை’ திட்டத்தில் விண்ணப்பிங்க!
சென்னை: தபால் தலையில் சுதந்திரப் போராட்ட தியாகிகள், பாரம்பரியச் சின்னங்கள்தான் இடம் பெறும். முதல் முறையாக எனது அஞ்சல் தலை திட்டத்தின் மூலம் நமது முகத்தினை அஞ்சல் தலையாக வைத்துக் கொள்ளும் திட்டம் அறிமுகப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று நடைபெற்ற இந்த திட்டத்தின் அறிமுக விழாவில் ஏராளமானோர் ஆர்வமுடன் விண்ணப்பித்தனர்.

உயிருடன் இருப்பவர்களுக்கு ஸ்டாம்ப்
இதுவரை மறைந்த தலைவர்களின் புகைப்படங்கள் மட்டுமே தபால் தலைகளாக வெளிவந்த நிலையில், உயிருடன் இருக்கும் சாதாரண மக்களின் புகைப்படங்களையும் தபால் தலைகளாக அச்சிடுவது எனது அஞ்சல் தலை திட்டத்தின் சிறப்பு அம்சமாகும்.

வட மாநிலங்களில்
இந்திய தபால்துறை சார்பில், கடந்த 2011-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் டெல்லியில் நடைபெற்ற தபால் தலை கண்காட்சியில் எனது அஞ்சல் தலை திட்டம் தொடங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து உத்திரபிரதேசம், மும்பை உள்பட வட மாநிலங்களில் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் புகைப்படத்துடன் கூடிய தபால் தலைகளை வாங்கி தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு எழுதி அனுப்பும் கடிதங்களில் ஒட்டி அனுப்பலாம். தபால் தலைகளை வாங்கி வீட்டில் சேகரித்து வைத்துக் கொள்ளலாம்.

தமிழ்நாட்டில் முதன்முறையாக
இந்த நிலையில் தமிழகத்தில் முதல் முறையாக இந்த திட்டம் நேற்று தொடங்கப்பட்டது. இதன் தொடக்கவிழா, சென்னை அண்ணாசாலையில் உள்ள சிறப்பு தபால் தலை சேகரிப்பு மையத்தில் நடைபெற்றது. விழாவில் முதல் அஞ்சல் தலையை போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் ஸ்ரீ மெர்வின் அலெக்ஸாண்டர் வெளியிட மத்திய ரிசர்வ் வங்கியின் சென்னை மண்டல இயக்குனர் ஜெ.சதக்கத்துல்லா பெற்றுக் கொண்டார்.

சென்னை, கோவை, திருச்சி, மதுரை
எனது அஞ்சல் தலை திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற ஏதேனும் ஒரு அடையாள அட்டையின் நகலுடன், தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, மதுரை மற்றும் புதுச்சேரியில் உள்ள சிறப்பு தபால்தலை சேகரிப்பு மையங்களில் விண்ணப்பிக்கலாம் என்று போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் ஸ்ரீ மெர்வின் அலெக்ஸாண்டர் கூறியுள்ளார்.
சென்னையில் இருந்து வாடிக்கையாளர்களின் புகைப்படம் ஒட்டிய தபால் தலைகள் தயாரிக்கப்பட்டு அவர்களது சொந்த முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.
சென்னையில் விண்ணப்பிப்பவர்களுக்கு 7 நாட்களுக்குள்ளும், மற்ற மையங்களில் விண்ணப்பிப்பவர்களுக்கு 15 நாட்களுக்குள்ளும் தபால் தலை அனுப்பி வைக்கப்படும். இதில் ரூ.300-க்கு 12 அஞ்சல் தலைகள் வழங்கப்படும். வாடிக்கையாளர்களின் வரவேற்பை பொறுத்து, பின்னர் இதற்கான விண்ணப்பங்களை தலைமை தபால் நிலையங்களில் வழங்குவதற்கும் ஏற்பாடு செய்யப்படும்.

பூக்கள் அலங்காரம்
தற்போது பூக்களால் ஆன தபால் தலைகள் மட்டுமே உள்ளன. விரைவில் பாரம்பரியம்மிக்க கட்டிடங்கள், பிரபல சுற்றுலா தலங்கள், மற்றும் விலங்குகளின் படங்களும் எனது அஞ்சல் தலைகளில் இடம் பெறும் என்று போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் கூறினார்.

மீண்டும் கடிதம்
கடிதம் எழுதுவது ஒரு கலை. செல்போன், மின் அஞ்சல் வருகைக்குப் பின்னர் கடிதம் எழுதுவது முற்றிலும் மறைந்து வருகிறது. இந்த எனது அஞ்சல்தலை திட்டத்தின் மூலம் மீண்டும் கடிதம் எழுதுவது உயிர்பிக்கப்படும். அந்த கடிதங்களில் இந்த நமது முகம் பதித்த அஞ்சல் தலைகளை ஒட்டி அனுப்பலாம். இந்த திட்டம் தற்போது சென்னை இளைஞர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications