கர்நாடக சட்டசபை தேர்தல்: பாஜக கண்ணில் விரலைவிட்டு ஆட்டுவாரா எதியூரப்பா?

கர்நாடகத்தில் பாஜக தலைமையிலான அரசின் பதவிக்காலம் முடிந்ததையடுத்து இன்று சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.
ஒரு தொகுதி தவிர மற்ற 223 தொகுதிகளிலும் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கியது. வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. இத்தேர்தலில் 2, 947 பேர் போட்டியிடுகின்றனர். இம்முறை வாக்குப்பதிவு நேரம் ஒரு மணி நேரம் அதிகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த தேர்தலில் பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதளம், பி.எஸ்.ஆர். காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் மாநிலத்தில் தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்தனர். பாஜக மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதளம் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் 222 தொகுதிகளில் போட்டியிடுகின்றனர்.
காங்கிரஸ் வேட்பாளர்கள் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடிகின்றனர். கட்சிகள் தவிர 1,233 சுயேச்சைகள் களத்தில் உள்ளனர். மாநிலத்தில் மொத்தம் 51, 648 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவுக்கு 65,000 வாக்கு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. மொத்தம் 4 கோடியே 36 லட்சத்து 14 ஆயிரத்து 915 வாக்காளர்கள் உள்ளனர்.
அதில் 35.5 லட்சம் பேர் இம்முறை தான் முதன்முதலாக வாக்களிக்கின்றனர். அதிகம் பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு அங்கு கூடுதல் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பு பணியில் கர்நாடகத்தைச் சேர்ந்த 88,323 போலீசாரும், மத்திய போலீஸ் படை, மத்திய துணை ராணுவபடை, மத்திய பாதுகாப்பு படை, கர்நாடக ஆயுதப்படை, நகர ஆயுதப்படை, 1,200 வனத்துறை அதிகாரிகள், 14,000 ஊர்காவல் படை, ஆந்திரா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா ஆகிய வெளி மாநிலங்களை சேர்ந்த போலீசார் உள்பட மொத்தம் 1.5 லட்சம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
எதியூரப்பா:
பாஜகவில் இருந்து விலகி கர்நாடக ஜனதா கட்சியை துவங்கிய முன்னாள் முதல்வர் எதியூரப்பா இத்தேர்தலில் போட்டியிடுகிறார். அதனால் லிங்காயத் சமூகத்தினரின் வாக்குகள் பாஜகவுக்கு கிடைப்பது சந்தேகம் என்று கூறப்படுகிறது.
பல்வேறு பிரச்சனைகளில் சிக்கிய பாஜக அரசு மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதில் முனைப்பாக இருக்கிறது. இம்முறை கர்நாடகவில் காங்கிரஸ் தான் ஆட்சி அமைக்கும் என்று அது நம்பிக்கையோடு இருக்கிறது.












Click it and Unblock the Notifications