சரப்ஜித்தை கொன்றது பாக். அரசு தான்: ஜெயிலில் உடன் இருந்தவர் பரபரப்பு குற்றச்சாட்டு
மும்பை: சரப்ஜித்தை பாகிஸ்தான் அரசு கொன்று விட்டது என ஜெயிலில் உடன் இருந்த சக கைதி குற்றச்சாட்டுத் தெரிவித்துள்ளார்.
லாகூர் குண்டுவெடிப்பு வழக்கில் தூக்குத் தண்டனை பெற்று, பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இந்தியரான சரப்ஜித் சிங், கடந்த சில தினங்களுக்கு முன், சக கைதிகளால் கொடூரமாக தாக்கப்பட்டார். இதனால், தலையில் பலத்த காயம் அடைந்து, கோமா நிலைக்குச் சென்ற சரப்ஜித் சிங், நினைவு திரும்பாமலேயே இறந்துவிட்டார்.
பாகிஸ்தான் சிறையில் சரப்ஜித் உடன் தங்கியிருந்தவர் பானுதாஸ் கரேல். இவர் கடந்த 2010-ம் ஆண்டு வழி தவறி பாகிஸ்தான் பகுதிக்குள் நுழைந்ததற்காக கைது செய்யப்பட்டார்.
பின்னர் லாகூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது சரப்ஜித் சிங்கை சந்தித்துள்ளார். இவர் கடந்த வருடம் ஜூன் 15-ம் தேதி பாகிஸ்தான் காட் லக்பாத் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.
சரப்ஜித் சிங் குறித்து அவர் கூறியதாவது:-
சரப்ஜித் வீட்டு நினைப்பாகவே இருந்தார். அவர் இந்தியாவுக்கு செல்ல வேண்டும் என்று ஒவ்வொரு நிமிடமும் ஏங்கிக்கொண்டிருந்தார்.
அவர் இந்திய கைதிகளுடன் மட்டும் அல்லாமல் பாகிஸ்தான் கைதிகளிடம் மிகவும் அன்பாக பழகினார். ஆனால் பாகிஸ்தான் கைதிகள் எங்களிடம் பிரச்சினை செய்வார்கள். சரப்ஜித் சிங்கும் நானும் ஒரே சிறையில் தான் இருந்தோம். ஆனால் அவரை உளவாளி என்று சந்தேகப்பட்டு பாகிஸ்தான் அரசு, அவர் மீது மட்டும் பல கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது.
இது அவரின் தலை விதியில்லை. பாகிஸ்தான் அரசு அவரை கொன்றுவிட்டது. இந்திய, பாகிஸ்தான் அதிகாரிகளுடன் இருந்த தகவல் பரிமாற்ற பிரச்சினையாலும் சரப்ஜித் தனது உயிரை இழந்து விட்டார்' என இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications