கர்நாடக சட்டசபைத் தேர்தல்: காலையில் வேகம் - பிற்பகலில் மந்தம் - மாலையில் விறுவிறு!
பெங்களூர்: கடும் வெயிலின் தாக்கத்தால், கர்நாடக சட்டசபைத் தேர்தல் படு மந்தமாக காணப்பட்டது. இருப்பினும் மாலையில் மீண்டும் சூடு பிடித்த வாக்குப் பதிவு ஓரளவு நல்ல அளவுடன் முடிவடைந்தது.
வாக்குப் பதிவு நகர்ப் புறங்களில் பகல் நேரத்தில் மந்தமாக இருந்தது. பெங்களூரில் பல பகுதிகளில் வாக்குச் சாவடி மையங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன. மாலையில் பின்னர் மீண்டும் வேகம் பிடித்தது. நகர்ப்புறங்களில்தான் இந்த மந்த நிலை. அதேசமயம், கிராமப்புறங்களில் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடந்தது. வாக்குப் பதிவு முடிவடைந்த 5 மணியளவில் சராசரியாக 61 சதவீத வாக்குகள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டது.
கர்நாடகாவில் 224 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இதில், மைசூர் மாவட்டம் பிரியபட்ணா தொகுதியில் பா.ஜ வேட்பாளர் திடீரென இறந்ததால், அங்கு தேர்தல் 28ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 223 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடக்கிறது.
இதில் காங்கிரஸ் 224, பா.ஜ 222, கர்நாடக ஜனதா கட்சி 209, மதச்சார்பற்ற ஜனதா தளம் 222, பி.எஸ்.ஆர் காங்கிரஸ் 188 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. இடதுசாரி கூட்டணி கட்சிகள் 30 தொகுதிகளில் போட்டியிடுகின்றன.

நீயா.. நானா...
இத்தனை அணிகள் போட்டியிட்டாலும், காங்கிரசுக்கும், பா.ஜ.வுக்கும் இடையேதான் பலப்பரீட்சை நடக்கிறது. அதிலும் ஆளும் கட்சியான பாஜவுக்கு கர்நாடகா ஜனதா கட்சி ஓட்டுகளை பிரித்து நெருக்கடி கொடுப்பதால் மீண்டும் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு குறைவாகவே உள்ளது. இதனால் காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என கருதப்படுகிறது.

ஹூப்ளியில் ஷெட்டர்...
ஹூப்ளி (மத்திய) தொகுதியில் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் போட்டியிடுகிறார்.

பெரிய தலைவர்கள்...
முன்னாள் முதல்வர்கள் எடியூரப்பா (ஷிகாரிபுரா), குமாரசாமி (ராமநகரம்), எதிர்க்கட்சி தலைவர் சித்தராமய்யா(வருணா) போட்டியிடுகின்றனர். மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வர் கொரட்டிகரே தொகுதியில் போட்டியிடுகிறார்.

புள்ளி விவரம்...
கர்நாடக தேர்தலில், மொத்தம் 2940 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மொத்த வாக்காளர் எண்ணிக்கை 4.36 கோடி. இதில் ஆண்கள் 2.22 கோடி. பெண்கள் 2.13 கோடி. தேர்தலுக்காக மொத்தம் 52,034 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஓவர் வெயில்...ஒரு மணி நேரம் எக்ஸ்ட்ரா...
வெயில் கொடுமை அதிகமாக இருப்பதால், வாக்காளர்களின் வசதிக்காக வாக்குப்பதிவு ஒரு மணி நேரம் அதிகரிக்கப்பட்டது. இதன்படி, காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் என மாநில தலைமை தேர்தல் அதிகாரி அனில்குமார் ஜா நேற்று அறிவித்துள்ளார்.

எச்சரிக்கை
பாதுகாப்பு பணியில் லட்சத்துக்கும் அதிகமான போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கள்ள ஓட்டு போடுபவர்கள் கைது செய்யப்பட்டு ஓராண்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications