இதுவரை 6 வழக்குகளில் ராமதாஸ் கைது...ஒரு வழக்கில் மட்டும் ஜாமீன்
திருச்சி: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இதுவரை 6 வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளார். அதில் ஒரு வழக்கில் மட்டுமே அவருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. இதனால் சிறையிலிருந்து அவர் விடுதலையாக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மரக்காணம் கலவரத்தைத் தொடர்ந்து விழுப்புரத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தலைவர் ஜி.கே.மணி உள்பட 520 பேரை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்
அதன் பின்னர் ராமதாஸ் உள்ளிட்டோர் மீது பல்வேறு வழக்குகளின் கீழ் போலீஸார் நடவடிக்கை எடுக்க ஆரம்பித்தனர்.

சித்திரை முழு நி்லவு பேச்சு
கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் மாமல்லபுரம் சித்திரை முழுநிலவு விழாக்களில் வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக டாக்டர் ராமதாஸ், ஜி.கே.மணி ஆகியோர் மீது மாமல்லபுரம் போலீசார் இரு வழக்குகள் பதிவு செய்தனர்.

திருச்சி சிறைக்கு வந்து காவல் நீட்டிப்பு
இந்த வழக்கில் டாக்டர் ராமதாஸை திருக்கழுக்குன்றம் கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீஸார் முயன்றனர். ஆனால் ராமதாஸுக்கு பிபி ஏறி விட்டதால் அவரைக் கூட்டி வர முடியவில்லை. மாறாக மாஜிஸ்திரேட் சிவா சிறைக்கு வந்து ராமதாஸுக்கு காவலை நீட்டித்தார்.

பழைய பாபா பட வழக்கு
மதுரையில் 2004ல் ரஜினி ரசிகர் தாக்கப்பட்ட வழக்கில், மதுரை 1வது குற்றவியல் கோர்ட் மாஜிஸ்திரேட் (பொ) ரவி, ராமதாசுக்கு பிடிவாரன்ட் பிறப்பித்தார். இவ்வழக்கில் திருச்சி சிறையில் அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கூடங்குளம் கேஸும்...
2012ல் கூடங்குளம் இடிந்தகரையில் 144 தடை உத்தரவை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தியதாக ராமதாஸ் மீது 2 வழக்கு பதிவு செய்திருந்தது. இதிலும் கைது செய்வதற்கான உத்தரவை கூடங்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்பால் திருச்சி மத்திய சிறைக்கு வந்து நேற்று அளித்தார். இந்த வழக்கிலும் திருச்சி மாஜிஸ்திரேட் மூலம் ராமதாசை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

6 வழக்குகள்...ஒன்றில் மட்டுமே ஜாமீன்
டாக்டர் ராமதாஸ் மீது 6 வழக்குகளில் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு வழக்கில் மட்டுமே அவருக்கு இதுவரை ஜாமீன் கிடைத்துள்ளது. மற்ற 5 வழக்குகளிலும் அவருக்கு ஜாமீன் கிடைத்தால்தான் அவரால் வெளியே வர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications