ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி 1 லட்சம் பேரிடம் கையெழுத்து வாங்கும் 'அங்காடித்தெரு' காசி!
தூத்துக்குடி: தூத்துக்குடி டூவிபுரம் 2வது தெருவைச் சேர்ந்தவர் நடிகர் காசி. இவர் அங்காடித்தெரு, அரவாண் உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கிய கதாபத்திரத்தில் நடித்துள்ளார். இவர் தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி 1 லட்சம் பேரிடம் கையெழுத்து வாங்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
இது குறித்து காசி தெரிவித்ததாவது, "கடந்த கடந்த மார்ச் மாதம் 23ம் தேதி காலை ஏற்பட்ட விஷ வாயு கசிவில் நானும் பாதிக்கப்பட்டேன்.எனது வீட்டின் அருகில் உள்ளவர்களும் பாதிக்கப்பட்டனர். மூச்சுத் திணறல் மற்றும் கண் எரிச்சல் ஏற்பட்டது.
மேலும் அப்பகுதியில் உள்ள மரங்களும், செடிகளும் கருகின. இதன் காரணமாக தூத்துக்குடி பகுதி பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த தொழிற்சாலை தூத்துக்குடியில் இயங்கினால் வருங்கால சந்ததிகள் பாதிக்கப்படுவார்கள். குறிப்பாக குழந்தைகள், பெண்கள் பெருமளவில் கேன்சர் நோய் வந்து பாதிக்கப்படுவார்கள்.

எனவே ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி எவ்வித அரசியல், அமைப்புகள் தொடர்பில்லாமல் என்னுடைய சுய முயற்சியால வாக்காளர் குழு என்ற அமைப்பின் மூலம் 1 லட்சம் பேரிடம் கையெழுத்து வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன்.
இந்த இயக்கத்திற்கு தூத்துக்குடி நகர மக்களிடம் மிகுந்த வரவேற்பு உள்ளது. இதுவரை ஸ்டெர்லைட் ஆலையை மூடவேண்டும் என்று 12 ஆயிரம் பேர் மனமுவந்து கையெழுத்திட்டுள்ளனர். 1 லட்சம் பேரிடம் கையெழுத்து பெற்று விட்டு இதன் நகல்களை தமிழக முதல்வர், பாரதப் பிரதமர், உச்சநீதிமன்றம்,தேசியபசுமைத்தீர்ப்பாயம் ஆகியோருக்கு அனுப்ப உள்ளேன்" என்றார் காசி.












Click it and Unblock the Notifications