பெண்கள் சீட்டில் ஆண்கள் உட்காரக் கூடாது... மதுரையில் அதிரடி நடவடிக்கை
மதுரை: மதுரை மாநகர அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இருக்கைகளில் ஆண்கள் அமர தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி யாராவது அமர்ந்தால், அந்தப் பேருந்தின் கண்டக்டர், டிரைவருக்கு மெமோ தர அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், டிரைவர்கள், கண்டக்டர்கள் கடுப்பாகியுள்ளனர்.
மதுரையில் ரொம்ப காலமாகவே இந்தப் பஞ்சாயத்து ஓடிக் கொண்டிருக்கிறது. அடித்துப் பிடித்து பஸ்சில் ஏறுவோர் தங்களுக்குரிய சீட்களில் உட்கார மாட்டார்கள். ஆண்கள் பெண்கள் சீட்களில் அமர்ந்து விடுவார்கள். அதேபோல ஆண்கள் சீட்டை நோக்கி பெண்களும் பாய்வார்கள்.
இதை சரி செய்ய பலமுறை நடவடிக்கை எடுக்கப்பட்டும் எதுவும் சரிப்பட்டு வரவில்லை. இந்த நிலையில் தற்போது புதிய அதிரடி நடவடிக்கை ஒன்றை மதுரையில் அறிமுகப்படுத்தியுள்ளனர்.

டிரைவருக்குப் பின் ஆண்களுக்கு
மதுரை மாநகர அரசுப் பேருந்துகளில் டிரைவர் சீட்டுக்குப் பின்புறம் உள்ள இருக்கைகள் அனைத்தும் ஆண்கள் உட்காரக் கூடிய சீட்களாகும். அதேசமயம், இங்கு பெண்களும் அமரலாம். அதில் தடை ஏதும் இல்லை.

இடது புறம் பெண்களுக்கு
பேருந்தில் ஏறியதும் எளிதாக பெண்கள் அமருவதற்கு வசதியாக டிரைவருக்கு இடதுபுற இருக்கைகள் பெண்களுக்காக பிரத்யேகமாக ஒதுக்கப்பட்டுள்ளது. பிற ஊர்களிலும் கூட இதே போலத்தான்.

கடைசி சீட் இருபாலாருக்கும்
சென்னையில் பேருந்தின் கடைசி சீட் பெண்களுக்கானதாகும். அதேசமயம், மதுரையில் இது இரு பாலாருக்கும் பொதுவானதாக ஒதுக்கப்பட்டுள்ளது.

பெண்களை நிற்க விடும் ஆண்கள்
பேருந்துகளில் ஏறும் ஆண்கள் பலர் பெண்கள் இருக்கைகளில் அமர்ந்து விடுவதால் பிரச்சினையாகி விடுகிறது. இதில் கண்டக்டர்கள் தலையிட்டு பெண்களுக்கு சீட்களை ஒதுக்கித் தரமுன்வருவதில்லை என்றும் பெண்கள் தரப்பில் புகார்கள் கொடுக்கப்படுகின்றன.

தட்டி எழுப்ப வேண்டும்
இதையடுத்து தற்போது மதுரை மாநகர போக்குவரத்துக் கழகம் புதிய நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. அதன்படி, டவுன் பஸ்களில் பெண்கள் சீட்டுகளில் ஆண் பயணிகள் அமரக்கூடாது. அப்படி அமர்ந்தால் அவர்களை கண்டக்டர், டிரைவர்கள் எழுப்பி விடவேண்டும் என போக்குவரத்து கழகம் உத்தரவிட்டுள்ளது.

ஆள் இருந்தால் உட்காராதே
டவுன் பஸ்களில் பெண் பயணிகள் இல்லாத நிலையில், அந்த இருக்கைகள் காலியாக இருந்தால் மட்டும் அதில் ஆண்கள் அமரலாம். அதேசமயம், அடுத்தடுத்த ஸ்டாப்புகளில் பெண்கள் ஏறினால் உடனடியாக ஆண் பயணி எழுந்து சீட் தரவேண்டும்.

கண்டக்டருக்கு மெமோ
எழ மறுத்தால் ஆண்களை எழுப்பி விட்டு, பெண் பயணிகளுக்கு இருக்கை பெற்றுத் தர வேண்டும். தவறும்பட்சத்தில், பஸ்சின் கண்டக்டர் மற்றும் டிரைவர்களுக்கு மெமோ வழங்கப்படும் என போக்குவரத்துக் கழகம் கடுமையாக எச்சரித்துள்ளது.

ஆங்காங்கே செக்கப்பு...
சொன்னதோடு நிற்காமல் ஆங்காங்கே தற்போது டிக்கெட் செக்கர்கள் பஸ்களில் ஏறி உத்தரவு அமல்படுத்தப்படுகிறதா என்பதை சோதிக்கின்றனர். எந்த பேருந்திலாவது பெண்கள் இருக்கையில் ஆண்கள் உட்கார்ந்திருந்தால் உடனே அந்தப் பேருந்து குறித்த தகவலை கிளை மேலாளர்களுக்கு அனுப்பி விடுகின்றனர். அதன் பின்னர் சம்பந்தப்பட்ட பேருந்தின் டிரைவர்களுக்கும், கண்டக்டர்களுக்கும் மெமோ பறக்கிறது.
என்னப்பா இது மதுரை பஸ் டிரைவர்கள், கண்டக்டர்களுக்கு வந்த சோதனை என்று டிரைவர்களும், கண்டக்டர்களும் புலம்பிக் கொண்டிருக்கின்றனராம்.












Click it and Unblock the Notifications