குடிகார கணவனின் டார்ச்சர் தாங்க முடியாமல் புது மணப்பெண் தீக்குளித்து தற்கொலை
சேலம்: சேலம் அருகே கணவன் தொடர்ந்து குடிவிட்டு வந்ததால் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த பேலூர் பெருமாள் பாளையத்தைச் சேர்ந்தவர் கௌசல்யா(20). அவருக்கும் வாழப்பாடியை அடுத்த நடுப்பட்டியைச் சேர்ந்த கோவிந்தராஜ் (27) என்பவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. குடிப்பழக்கம் உள்ள கோவிந்தராஜ் தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார்.
இதனால் கவலை அடைந்த கௌசல்யா இனிமேல் குடிக்கக் கூடாது என்று கணவரிடம் சத்தியம் வாங்கியுள்ளார். சத்தியத்தை மீறி கோவிந்தராஜ் கடந்த சில நாட்களாக குடித்துள்ளார். இதனால் கௌசல்யா மனமுடைந்தார். இந்நிலையில் நேற்று இரவு இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கௌசல்யா சமையல் அறைக்கு சென்று அங்கிருந்த மண்ணெண்ணெயை எடுத்து தன் உடல் மீது ஊற்றி தீ வைத்தார். அதில் படுகாயம் அடைந்த அவர் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.
திருமணமான மூன்றே மாதத்தில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.