அரசு பஸ்களில் ஏத்த மாட்டேங்கிறாங்க: கலெக்டரிடம் பார்வையற்றவர்கள் மனு
தூத்துக்குடி: தூத்துக்குடியில் அரசு பேருந்துகளில் தங்களை ஏற்ற மறுக்கும் கண்டக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பார்வையற்றவர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு கொடுத்துள்ளனர்.
தூத்துக்குடி சில்வர்புரத்தில் உள்ள லூசியா பார்வையற்றோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினர் இன்று கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மேலும் அவர் கலெக்டர் ஆசிஷ் குமாரிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர்.
அதில் அவர்கள் கூறியிருப்பதாவது,
பார்வையற்றவர்களான நாங்கள் மாற்றுத் திறனாளிகள் என்பதற்கான தேசிய அடையாள அட்டை வைத்துள்ளோம். இந்த அட்டையை புதுப்பிக்க தேவையில்லை என்று எங்கள் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், பார்வையற்றவர்களான எங்களை அரசு பேருந்துகளில் கண்டக்டர்கள் ஏற்றுவதே இல்லை. அப்படியே நாங்கள் மற்றவர்களிடம் கேட்டு ஏறினாலும் இந்த பேருந்து அங்கு போகாது என்று சொல்லி எங்களை இறக்கிவிட்டு செல்கின்றனர்.
மாற்றுத் திறனாளிகளான நாங்கள் அதற்கான அடையாள அட்டைகளை வைத்திருந்தபோதும் எங்களுக்கு அரசின் சலுகைகள் எதுவும் கிடைப்பதில்லை. அரசு பேருந்துகளில் எங்களால் பயணிக்க முடியவே இல்லை. எங்களை அரசு பேருந்து கண்டக்டர்கள் மற்றவர்கள் முன்பாக கண்டபடி திட்டுவது மனதை பாதிக்கிறது என்று அதில் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications