திருவனந்தபுரத்தில் சிக்னல் கோளாறு: பயணிகளை சிரமப்படுத்திய 8 ரயில்வே ஊழியர்கள் சஸ்பெண்டு
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் ரயில் நிலையத்தில் சிக்னல் பிரச்சினை ஏற்படுத்தி பயணிகளை சிரமத்திற்கு உள்ளாக்கிய ஸ்டேசன் மாஸ்டர் உள்ளிட்ட 8 ரயில்வே ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் மத்திய ரெயில் நிலையத்தில் நேற்று முன்தினம் திடீரென்று ரெயில்வே தானியங்கி சிக்னலில் கோளாறு ஏற்பட்டது. சிக்னல்கள் இயங்காததால் திருவனந்தபுரம் ரெயில் நிலையத்தில் புறப்பட காத்திருந்த ரெயில்கள் புறப்பட முடியவில்லை. நாட்டின் பலபகுதிகளில் இருந்தும் திருவனந்தபுரம் ரயில் நிலையத்திற்கு வந்து கொண்டிருந்த ரயில்கள் அனைத்தும் அருகில் உள்ள ரெயில் நிலையங்களில் நிறுத்தப்பட்டது.
பயணிகள் தவிப்பு
தற்போது கோடை விடுமுறை காலம் என்பதால் பெண்கள், குழந்தைகளுடன் சுற்றுலாவாக திருவனந்தபுரத்திற்கு புறப்பட்டவர்கள் ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்ட தால் சிரமத்திற்கு ஆளாகினர். 6 மணியில் தொடங்கிய இந்த சிக்கல் 9 மணிக்குதான் சரி செய்யப்பட்டது. இதன் பிறகே ரெயில் போக்குவரத்து சீரானது.
8 பேர் சஸ்பெண்ட்
சிக்னல் கோளாறுக்கான காரணம் பற்றி விசாரணை நடத்த திருவனந்தபுரம் ரெயில்வே கோட்ட மேலாளர் ராஜேஷ் அகர்வால் உத்தரவிட்டார். விசாரணையில், ரயில்வே ஊழியர்களின் தவறு காரணமாக இந்த சிக்னல் கோளாறு ஏற்பட்டது தெரிய வந்தது.
இதை தொடர்ந்து திருவனந்தபுரம் ரயில் நிலைய ஸ்டேஷன் மாஸ்டர், சண்டிங் மாஸ்டர், உள்பட 8 பேரை ராஜேஷ் அகர்வால் சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.
ஊழியர்கள் பற்றாக்குறை
இந்த சஸ்பெண்டு உத்தரவுக்கு எஸ்ஆர்எம்யூ தொழிற் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. சிக்னல் கோளாறு தவறுக்கு ஊழியர்கள் பற்றாக் குறைதான் காரணம் என்று கூறியுள்ள அந்த சங்கம், போதுமான ஊழியர்களை நியமிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications