தோளில் கைபோட்டு அப்படி என்ன ’சிதம்பர ரகசியம்’ பேசினர் சோனியாவும் சுஷ்மாவும்....!

நேற்று நிலக்கரி சுரங்க ஊழல், ரெயில்வே பணி நியமன ஊழல் பிரச்சினைகளில் மத்திய மந்திரிகள் அஸ்வினிகுமார், பன்சால் பதவி விலகக்கோரி பாரதீய ஜனதாவும், பிற எதிர்க்கட்சிகளும் அமளியில் ஈடுபட்டதைத் தொடர்ந்து சபை ஒத்திவைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து சுஷ்மா சுவராஜ், மூத்த தலைவரான அத்வானியுடனும், பிற எம்.பி.க்களுடனும் நாடாளுமன்ற மைய மண்டபம் நோக்கி நடந்து சென்றார்கள்.
அப்போது திடீரென சுஷ்மாவை நோக்கி விறுவிறுவென்று வந்த சோனியா, அவரது தோளில் கை வைத்து தோழமை உணர்வுடன் பேசினார். சிறிது தூரம் அவர் சுஷ்மாவுடன் நடந்தும் சென்றார். அவர்கள் உற்சாகத்துடன் பேசிக்கொண்டதாக பார்த்தவர்கள் கூறுகின்றனர். ஆனால், என்ன பேசினார்கள் என்பது குறித்து பாரதீய ஜனதா தலைவர்கள் வாய் திறக்கவில்லை.
இருப்பினும் இந்த சம்பவம் நாடாளுமன்ற வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.வரும் 10-ந்தேதி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டம் முடிவதற்குள் உணவு பாதுகாப்பு மசோதா, நிலம் கையகப்படுத்துதல் மசோதா ஆகியவற்றை நிறைவேற்ற சுஷ்மாவின் ஒத்துழைப்பை சோனியா நாடி இருப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்றத்தில் தனது பேச்சில் இடையூறு செய்யும்படி கட்சி எம்.பி.க்களை காங்கிரஸ் தலைவர் சோனியா தூண்டினார் என்ற பரபரப்பு குற்றச்சாட்டை எதிர்க்கட்சி தலைவரான சுஷ்மா சுவராஜ் (பா.ஜனதா) வெளியிட்டு கடந்த வாரம் பரபரப்பை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications