3 மாசமாகியிருச்சு... இன்னும் ஏன் நீக்கலை- கொந்தளித்த ஜெத்மலானி!

பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக, நிதின் கட்காரி இருந்த போது அவருக்கு எதிராக கலகக் குரல் எழுப்பியவர் ராம்ஜெத்மலானி. அதேபோல் நரேந்திர மோடியைத்தான் பிரதமர் வேட்பாளராக்க அறிவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி வந்தார். இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் அவர் பாஜகவில் இருந்து சஸ்பென்ட் செய்யப்பட்டார். அவருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸும் அனுப்பி வைக்கப்பட்டது. அவரும் பதில் அளித்திருந்தார். இதன் பின்னர் ராம்ஜெத்மலானி அமைதியாக இருந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று பாஜகவின் நாடாளுமன்ற குழுக் கூட்டம் அத்வானி தலைமையில் அவரது வீட்டில் நடைபெற்றது. இதில் அத்வானி, சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லி உள்ளிட்ட மூத்த தலைவர்களும், எம்.பி.க்களும் கலந்து கொண்டனர். அப்போது திடீர் என்று ராம்ஜெத்மலானி வந்து கூட்டத்தில் கலந்து கொண்டு, மத்திய அரசுக்கு எதிரான ஊழல் புகார்களில் பாரதிய ஜனதா தீவிரம் காட்டாமல் இருப்பது ஏன்? என்னிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினீர்கள். 3 மாதம் ஆகி விட்டது. நானும் பதில் கொடுத்து விட்டேன். என்னை ஏன் இன்னும் கட்சியில் இருந்து நீக்காமல் இருக்கிறீர்கள் என்று கேட்டுவிட்டு வெளியேறினார்.
இதைத் தொடர்ர்ந்து மற்ற பாஜக தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். ராம்ஜெத்மலானியை கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்குவதற்கான அறிவிப்பு அனேகமாக இன்று வெளியாகலாம் என்று டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications