6 ராஜ்யசபா தமிழக எம்.பி.கள் உட்பட 8 பேருக்கு பிரிவு உபசாரம்
டெல்லி: நாடாளுமன்றத்தின் ராஜ்யசபாவில் பதவிக் காலம் நிறைவடைய இருக்கும் 6 தமிழக எம்.பிக்கள் உட்பட 8 பேருக்கு நேற்று பிரிவு உபசார நிகழ்ச்சி நடைபெற்றது.
வரும் ஜூன், ஜூலை மாதங்களில் ராஜ்யசபா உறுப்பினர் பதவிக்காலம் நிறைவு பெறவுள்ள பிரதமர் மன்மோகன் சிங், குமார் தீபக் தாஸ் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த அதிமுகவின் வா. மைத்ரேயன், ஆ. இளவரசன், திமுகவின் திருச்சி சிவா, கனிமொழி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி. ராஜா, காங்கிரஸ் உறுப்பினர் பி.எஸ். ஞானதேசிகன் உள்ளிட்டோருக்கு நேற்று பிரிவு உபசாரம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் அதிமுகவின் மைத்ரேயன் பேசுகையில், ராஜ்யசபாவுக்கு 2வது முறையாக என்னை அனுப்பிய தமிழக முதல்வருக்கு நன்றி கூற விரும்புகிறேன். 2008 ஏப்ரல் 24-ந் தேதி ஒரு நாள் முழுவதும் அவை நடவடிக்கையில் பங்கேற்கக்கூடாது என்று எனக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டதை நினைத்துப் பார்க்கிறேன்.உயிரிழந்தோருக்கு மாநிலங்களவையில் மௌன அஞ்சலி செலுத்தியிருக்கிறோம். ஆனால், இலங்கைப் போரின் போது தமிழ் ஈழத்தில் உயிரிழந்த 40,000 பேரை இந்த அவை கவனத்தில் கொள்ளாதது எனது மனதில் நிழலாடுகிறது என்றார்.அதிமுகவின் இளவரசன் பேசுகையில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை ஒரு வளர்ப்புத் தாய் என புகழாரம் சூட்டியதுடன், ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் காரசாரமாக பேசுவர். ஆனால், சபைக்கு வெளியே கட்சி பாகுபாடின்றி பழகுவர். இது ஆரோக்கியமான அரசியலுக்கு எடுத்துக்காட்டாகும் என்று கூறினார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா தமது உரையின் போது, இந்தியாவில் எது வேண்டுமானாலும் தோல்வி அடையலாம். ஆனால், நாடாளுமன்றம் மட்டும் என்றும் தோற்காது. எந்தவித பிரச்னையாக இருந்தாலும் நாடாளுமன்றத்தில் எடுத்துரைக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
"இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் எட்டாவது பிரிவில் உள்ள மொழிகளை ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும் என்று தனிநபர் சட்ட மசோதாவை அறிமுகப்படுத்தினேன்.அதில் தமிழ் மொழியும் உள்ளது. அந்த மசோதா நிறைவேறவில்லை. அந்த முயற்சி தொடர வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்தார் திமுகவின் திருச்சி சிவா. திமுகவின் கனிமொழி பேசுகையில், வருங்காலத்தில் இலங்கைத் தமிழர் பிரச்னை, மீனவர்கள் தாக்கப்படும் விவகாரம் ஆகியவற்றை உறுப்பினர்கள் எழுப்பத் தேவையில்லாத வகையில், அந்த பிரச்னைகளுக்கு மத்திய அரசு நிரந்தரத் தீர்வு காண வேண்டும். இங்கு நடைபெறும் பிரிவு உபசார நிகழ்வுதான் அமளியின்றி முழுமையாகக் கேட்கும் வகையில் உள்ளது என்றார்.
இலங்கைத் தமிழர்களுக்கு மத்திய அரசு ஏராளமான உதவிகளை வழங்கி வருகிறது. இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான் ஆகிய நாடுகளை அழைத்து மீனவர்கள் தாக்கப்படும் பிரச்னைக்கு இந்தியா நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று இந்த அவையில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்றார் காங்கிரஸின் ஞானதேசிகன்.












Click it and Unblock the Notifications