ரஜினி ரசிகர்களைத் தாக்கிய வழக்கில் ராமதாஸுக்கு ஜாமீன்
மதுரை: மதுரையில் ரஜினி ரசிகர்கள் தாக்கப்பட்ட வழக்கில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸுக்கு மதுரை கோர்ட் ஜாமீன் அளித்தது. இது ராமதாஸுக்குக் கிடைத்துள்ள 2வது ஜாமீனாகும்.
மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக பா.ம.க. நிறுவனத்தலைவர் டாக்டர் ராமதாஸ் கடந்த 2004-ம் ஆண்டு வந்தார். நெல்பேட்டை அருகே காரில் சென்று கொண்டு இருந்தபோது ரஜினி ரசிகர்கள் டாக்டர் ராமதாசுக்கு கறுப்பு கொடி காட்டினர்.
அப்போது டாக்டர் ராமதாசுக்கு பாதுகாப்பாக வந்தவர்கள் ரஜினி ரசிகர்களை சரமாரியாகத் தாக்கி விரட்டியடித்தனர். இதுகுறித்து விளக்குத்தூண் போலீசில் ரஜினி ரசிகர்கள் புகார் கொடுத்தனர். இதை தொடர்ந்து டாக்டர் ராமதாஸ் உள்பட 11 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இந்த வழக்கு மதுரை 1-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது.
ஏற்கனவே இந்த வழக்கில் அவருக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டதால் திருச்சி சிறையில் இருக்கும் டாக்டர் ராமதாஸ் கைது செய்யப்பட்டார். இதையடுத்து ஜாமீன் வழங்கும்படி டாக்டர் ராமதாஸ் சார்பில் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
மாஜிஸ்திரேட் ரவி முன்பு கடந்த 6ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பு வக்கீலும், விளக்குத்தூண் போலீஸ் இன்ஸ்பெக்டரும் பதில் அளிக்கும்படி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். பின்னர் 8ம் தேதி அதாவது நேற்றைக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.
நேற்று இந்த மனு விசாரணைக்கு வந்தது. இன்று உத்தரவு பிறப்பிப்பதாக மாஜிஸ்திரேட் அறிவித்தார். அதன்படி இன்று தீர்ப்பளித்த மாஜிஸ்திரேட், ரூ. 10,000 ரொக்க ஜாமீன் மற்றும் இரு ந பர் ஜாமீனில் ராமதாஸை விடுவிக்கலாம் என்று கூறி ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications