போலீஸ் நிலையத்தில் தீக்குளித்து இறந்த பெண்: பாதிரியார் மீது நடவடிக்கை கோரும் தந்தை
சென்னை: மகளின் சாவுக்கு காரணமான பாதிரியார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் நிலையத்தில் தீக்குளித்து உயிரிழந்த இளம் பெண்ணின் தந்தை, சென்னை போலீஸ் கமிஷனரிடம், புகார் கொடுத்துள்ளார்.
சென்னை, சூளைபள்ளம், எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் கொண்டையா. இவரது மகள் சுனிதா. இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். சுனிதாவிற்கும் பாதிரியார் சேகர் என்பவருக்கும் இடையே தொடர்பு ஏற்படவே இருவரும் மேடவாக்கத்தில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்தனர்.
இதுகுறித்து கொண்டையா கொடுத்த புகாரின் அடிப்படையில், கடந்த ஏப்ரல் 13-ந் தேதி சுனிதாவையும், பாதிரியார் சேகரையும் எம்.ஜி.ஆர். நகர் போலீசார் விசாரணைக்கு அழைத்து வந்தனர்.
அப்போது திடீரென்று சுனிதா, போலீஸ் நிலையத்தில் இருந்த ஆயிலை உடலில் ஊற்றிக் கொண்டு தீவைத்து தற்கொலை செய்துகொண்டார்.
இதனையடுத்து மகளின் தற்கொலைக்கு காரணமான பாதிரியார் சேகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் சென்னை போலீஸ் கமிஷனரிடம் கொண்டையா புகார் கொடுத்துள்ளார். இந்த புகார் குறித்து செய்தியாளர்களிடம் கொண்டையா பேசியதாவது:
போலீஸ் விசாரணைக்கு அழைத்து சென்றபோது, என் மகள் சுனிதா தற்கொலை செய்து கொண்டார். இதன் பின்னர், 3 நாட்கள் என்னையும், என் மனைவியையும் போலீஸ் நிலையத்தில் பிடித்து வைத்து, யாரையும் சந்திக்கவிடவில்லை. என் மகள் சாவுக்கு பாதிரியார் சேகர்தான் முழு காரணம். ஆனால் அவர் மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
சர்ச்சுக்கு சென்ற என் மகள் சுனிதாவுக்கு பரிசுகள் கொடுத்து மயக்கி அவளை பாதிரியார் சேகர் பாலியல் உறவு கொண்டுள்ளார். இதை நான் பலமுறை கண்டித்தும் இருவரும் கேட்கவில்லை. சேகரிடம் இருந்து சுனிதாவை பிரித்து, வெளியூருக்கு அனுப்பி வைத்தாலும், அவளை எப்படியாக கண்டுபிடித்து சேகர் அழைத்து சென்று விடுவார்.
இது பற்றி போலீசில் புகார் தெரிவித்தேன். இருவரையும் விசாரணைக்கு அழைத்து சென்ற போது என் மகள் தற்கொலை செய்து கொண்டாள். என் மகள் சாவுக்கு காரணமாக இருந்த பாதிரியார் சேகரும், அவரது தங்கை சுமதியும் எங்களை கொலை செய்துவிடுவதாக மிரட்டுகின்றனர். இதுகுறித்து போலீசில் புகார் செய்துள்ளேன் என்று கொண்டையா கூறினார்.












Click it and Unblock the Notifications