காயத்தால் அனுதாப ஓட்டு நிச்சயம்... படுத்துக் கொண்டே ஜெயிப்பார் இம்ரான் கான்: அரசியல் நிபுணர்கள்

அச்சுறுத்தல்களுக்கிடையே, பாகிஸ்தானில் வரும் 11-ம் தேதி பாராளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரம் செய்வதற்காக சென்ற போது, டெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சி தலைவர் இம்ரான் கான் லாகூர் மேடையில் இருந்து விழுந்து காயம் அடைந்தார். தலைகீழாக விழுந்ததால் இம்ரான் கானின் தலை மற்றும் முதுகில் பலத்த காயம் ஏற்பட்டது.
சவுக்கத் கானம் மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கழுத்தில் உள்ள எலும்பு மற்றும் முதுகெலும்பில் லேசான முறிவு ஏற்பட்ட போதிலும் அவர் விரைவில் பூரண குணமடைந்துவிடுவார் என டாக்டர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இம்ரான் கானுக்கு தலையிலும் பட்ட காயத்தினால் அதிக ரத்தம் வெளியேறிய நிலையில், மண்டையோட்டு எலும்பு பாதிக்கப்படவில்லை எனவும் , எனினும் அவருக்கு பரிசோதனைகள் செய்ய வேண்டியிருப்பதால் மேலும் சில நாட்கள் மருத்துவமனையில் ஓய்வெடுக்க வேண்டும் என்றும் டாக்டர்கள் கூறியுள்ளனர்.
இந்நிலையில், அவர் மருத்துவமனையில் இருந்தாலும், அங்கிருந்தபடியே தொலைபேசி மூலம், ஓரிரு பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றுவார் என்று அவரது கட்சி தலைவர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் காயம் அடைந்து மருத்துவமனையில் இருப்பதால் இம்ரான் கானுக்கு அனுதாப ஓட்டுகள் அதிகம் கிடைக்கும் என்று சில அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த தேர்தலில் நவாஸ் ஷெரிப் கட்சி அதிக இடங்களைப் பிடிக்கும் என்று பல ஆய்வுகள் தெரிவித்த போதும், மிகவும் பிரபலமான பஞ்சாப் மாகாணத்தில், இளைஞர்கள் மற்றும் நடுத்தர வகுப்பினர் இம்ரான்கானை ஆதரிப்பதாக தெரியவந்துள்ளது.












Click it and Unblock the Notifications