கடல் கடந்து வந்து தமிழக காதலரை கரம் பிடித்த மலேசிய பெண்!

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் ஆஷா தெருவை சேர்ந்தவர் தாமரைக் கண்ணன் (29). இவர் கடந்த 2008 ம் ஆண்டு மலேசியா நாட்டிற்கு வேலைக்கு சென்றார்.
அங்கு பகாங் என்ற பகுதியில் ஒரு கடையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது அருகில் மளிகை கடை வைத்திருந்த கில்லாங் பகுதி தாமன் செந்தோசாவை சேர்ந்த நடராஜன் என்பவரின் மகள் தில்லைஅஞ்சலையுடன் (30) பழக்கம் ஏற்பட்டு, அது காதலாக மாறி இருவரும் கடந்த 5 வருடங்களுக்கு மேலாக காதலித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில், தில்லையின் தந்தை நடராஜன் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டதால் கடையை காலி செய்து விட்டு தில்லை, அருகில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் காசாளராக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் காதலர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இதற்காக மலேசியாவில் இருவரும் திருமணம் செய்ய முயன்ற போது திருமணமாகாதவர் சான்றிதழ் பெறுவதில் தாமரைக்கண்ணனுக்கு சிக்கல் ஏற்பட்டது.
எனவே தமிழ்நாட்டிற்கு வந்த தாமரைக்கண்ணன் பெற்றோரிடம் சம்மதம் கேட்டார் அதோடு சான்றிதழ் பெறவும் முயற்சி செய்தார்.
ஆனால் அவரின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் தாமரைக்கண்ணணுக்கு மேலும் சிக்கல் ஏற்பட்டது.
இதனால், தில்லைஅஞ்சலை, மலேசியா நாட்டில் தான் திருமணமாகாதவர் என்ற சான்றிதழை பெற்றுக் கொண்டு தமிழகம் வந்தார்.
இதனையடுத்து, இவர்கள் இருவரும் தங்களுக்கு திருமணம் செய்து வைக்க கோரி ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
இது தொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனாம்பாள் மேற்படி தாமரைக்கண்ணனின் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அவர்கள் சம்மதம் தெரிவிக்கவில்லை என கூறப்படுகின்றது.
இதனையடுத்து, காதலர்கள் தாமரைக் கண்ணணையும், காதலி தில்லை அஞ்சலையும் காவல் நிலையத்தில் வைத்து இன்ஸ்பெக்டர் மீனாம்பாள் முன்னிலையில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர்.
இதில், தில்லைஅஞ்சலை மலேசிய நாட்டு குடியுரிமை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications