பணத்திற்கு விலை போகும் பதவி: அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை முற்றுகையிட்ட அதிமுக நிர்வாகிகள்
சேலம்: சேலத்தில் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அதிமுக நிர்வாகிகள் முற்றுகையிட்ட சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு சங்கங்களுக்கு சமீபத்தில் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலை திமுக புறக்கணித்தது. இதனால் கூட்டுறவு சங்க தேர்தலில் அதிமுகவினரே பெரும்பாலான இடங்களில் வேட்புமனு தாக்கல் செய்து வெற்றி பெற்றனர்.
இந்த நிலையில் சேலம் மாவட்டம் காடையாம்பட்டி ஒன்றியத்தில் பல கூட்டுறவு சங்கங்களுக்கு அதிமுகவினர் யாரும் பதவியில் நியமிக்கப்படவில்லை என்றும், திமுக, பாமக போன்ற மாற்று கட்சியினரே பதவிக்கு வந்துள்ளனர் என்றும் புகார் கூறப்படுகின்றது. இது குறித்து அதிமுக ஒன்றியச் செயலாளர் மாதேஸ்வரனை சந்திக்க சென்ற அதிமுக நிர்வாகிகள் நடேசன், ரமேஷ் உள்ளிட்டோரை அவர் அவமானப்படுத்தி அனுப்பியதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த நடேசன், ரமேஷ் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் சேலம் ஜங்ஷன் அருகில் உள்ள நெடுஞ்சாலை நகரில் இருக்கும் தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு புகார் தெரிவிக்க சென்றனர். ஆனால் அவர் ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக ஓமலூர் ரோட்டில் உள்ள பார்க் பிளாஸா என்ற ஹோட்டலுக்கு சென்றுள்ளதாக கூறியுள்ளனர்.
இதனையடுத்து அவர்கள் அந்த ஹோட்டலுக்கு சென்றனர். அப்போது, விழாவில் கலந்து கொண்டுவிட்டு காரில் ஏறச் சென்ற அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மறித்து அவர்கள் முற்றுகையிட்டனர்.
மேலும், காடையாம்பட்டி ஒன்றிய செயலாளர் மாதேஸ்வரன், கூட்டுறவு தேர்தலில் எதிர் கட்சியினரிடம் பணம் வாங்கிக் கொண்டு பதவி கொடுத்துள்ளார். எனவே, அவர் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் கூறினர்.
இனால், அதிர்ச்சி அடைந்த அமைச்சர் நீங்கள் இப்படியெல்லாம் கூட்டமாக வந்து வழியை மறித்து பிரச்சனை செய்யக் கூடாது. இந்த சம்பவம் குறித்து முதல்வர் கவனத்துக்கு நான் கொண்டு செல்கின்றேன். உங்களுக்கு உரிய நீதி கிடைக்கும். அதற்கு நான் உறுதி என்று உறுதியளித்தார்.
இதனையடுத்து அதிமுக தொண்டர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications