அரசுப்பள்ளிகளில் ஆங்கிலவழிக்கல்வியா... கருணாநிதி கண்டனம்

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: "கடந்த கல்வி ஆண்டில், 320 அரசுப் பள்ளிகளில், முதல் மற்றும் ஆறாம் வகுப்புகளில் தலா இரண்டு ஆங்கில வழி வகுப்புகள் தொடங்கப்பட்டன. 640 பிரிவுகள் தொடங்கப்பட்டு அதில் 22,400 மாணவர்கள் படித்து வருகின்றனர்.
அதனைத் தொடர்ந்து, வரும் கல்வி ஆண்டு முதல் தேவைப்படும் அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகள் தொடங்கப்படும். இதனால் ஆண்டுக்கு 1.5 இலட்சம் மாணவ - மாணவியர் பயன் பெறுவர்" என்று அ.தி.மு.க. அரசின் பள்ளிக் கல்வி அமைச்சர் 10-5-2013 அன்று தமிழகச் சட்டப்பேரவையில் பள்ளிக் கல்வி மானியக் கோரிக்கையின்போது அறிவித்திருக்கிறார்.
ஆங்கிலத்தைப் பயிற்று மொழியாகக் கொண்டு கல்வி பயின்றால்தான் அறிவு மேம்படும் என்பது ஒருவித மனநிலையே தவிர, அதில் எள்ளளவும் உண்மை இல்லை. தாய் மொழியில் கல்வி பயில்வதுதான் சுயசிந்தனை செழுமை அடைவதற்கு வாய்ப்பாகும். பிறமொழியில் கல்வி கற்பது என்பது சுயசிந்தனைக்கு பெரும் தடையாக அமைந்துவிடும்.
தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளிகள் மாணவர்களை ஈர்க்க வேண்டும் என்பதற்காக, ஆங்கிலத்தைப் பயிற்று மொழியாக அறிவிப்பது ஏற்கத்தக்க நடைமுறை ஆகாது. சமச்சீர் கல்வி நடைமுறைக்கு வந்ததற்குப் பிறகு, பாடத் திட்டத்தைப் பொறுத்தவரை தனியார் பள்ளிகளும், அரசுப் பள்ளிகளும் சமநிலையிலேயே உள்ளன. எனவே அரசுப் பள்ளிகளை மேம்பாடுடைய கல்வி மையங்களாக மாற்றிட, சிறந்த தனியார் பள்ளிகளைப் போல, அரசுப் பள்ளிகளிலும் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை உருவாக்கி, வளர்த்து, தரமான கல்வி வழங்குவது ஒன்றே நல்ல ஏற்பாடாக இருந்திட முடியும்.
மத்திய அரசு நடத்தும் வேலை வாய்ப்புக்கான தேர்வுகள் அனைத்தையும் தமிழிலும் நடத்திட வேண்டும்; சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு மொழியாக தமிழ் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்ற முற்போக்குக் கொள்கைகள் வலிவு பெற்று வரும் இந்தக் காலக் கட்டத்தில் திடீரென்று அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி என்பது தூங்குகின்ற புலியை வீண் வம்புக்கு இழுக்க இடறி விடுவதைப் போன்றது.
தமிழகத்தின் முக்கியமான இந்தப் பிரச்சினை குறித்து வாயைத் திறந்தால், எங்கே முதலமைச்சரின் கோபத்திற்கு ஆளாகிட நேரிடுமோ என்று, தமிழகத்திலே தமிழுக்காகத் தாங்கள் தான் பிறவியெடுத் திருக்கிறோம் என்பதைப் போல எண்ணிக் கொண்டு செயல்படும் சில அரசியல்வாதிகள் தங்கள் வாயைத் திறக்காமல் இருப்பதைப் பார்க்கும்போது புலிக்குப் பயந்தவர்கள் என் மேல் படுத்துக் கொள்ளுங்கள்! என்ற பழமொழி தான் நினைவிற்கு வருகிறது என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications