ஆத்திரத்தில் அவதூறு பேசுகிறார் ஜெ.: அடக்கு முறையை எதிர்த்து வழக்குத் தொடர ராமதாஸ் முடிவு

Subscribe to Oneindia Tamil

Dr Ramadoss to sue CM
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சி வன்முறையை உபயோகிக்கும் கட்சியில்லை. முதல்வர் ஜெயல்லிதா ஆத்திரத்தில் அவதூறு பரப்புகிறார். எனவே தமிழக அரசின் அடக்கு முறைகளை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழக சட்டப்பேரவையில் நேற்று சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதில் அளித்துப் பேசிய முதல்வர் ஜெயலலிதா, வட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக நடைபெற்ற வன்முறைகளுக்கு பாட்டாளி மக்கள் கட்சிதான் காரணம் என்றும், இதற்கான சேதம் மதிப்பிடப்பட்டு, பாட்டாளி மக்கள் கட்சியிடமிருந்து வசூலிக்கப்படும் என்றும் கூறியிருக்கிறார்.

ஆட்சி அதிகாரத்தில் இருப்பதால் எதைவேண்டுமானாலும் கூறலாம் என்ற எண்ணத்தில், பாட்டாளி மக்கள் கட்சி மீது அவதூறான குற்றச்சாட்டுகளை முதல்வர் அள்ளி வீசியிருக்கிறார்.

இல்லாத அதிகாரம்

தமது விருப்பத்தை வெளிப்படுத்தும் வகையில், தமக்கு இல்லாத அதிகாரத்தைப் பயன்படுத்தி, பா.ம.க.வை தடை செய்வோம் என்ற அளவுக்கு ஆத்திரத்தை உமிழ்ந்திருக்கிறார். பா.ம.க. மீது முதல்வர் ஜெயலலிதா எந்த அளவுக்கு வஞ்சத்தையும், பழிவாங்கும் உணர்ச்சியையும் கொண்டிருக்கிறார் என்பதற்கு இதுவே உதாரணம்.

வன்முறை கட்சியில்லை

மரக்காணம் கலவரத்திற்கும், அதன் பின் நடைபெற்ற வன்முறை நிகழ்வுகளுக்கும் பா.ம.க. எந்த வகையிலும் பொறுப்பல்ல என்பதை பலமுறை தெளிவாகக் கூறியிருக்கிறேன். பா.ம.க. ஒருபோதும் வன்முறைப் பாதையை கையில் எடுத்தது கிடையாது; அதற்கான தேவையும் எங்களுக்கு இல்லை.

மாமல்லபுரம் சித்திரை முழு நிலவு வன்னிய இளைஞர் பெருவிழாவிற்கு வந்தவர்கள் மீது, மரக்காணத்தில் திட்டமிட்டு தாக்குதல் நடத்தியது விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்தான். இந்தத் தாக்குதலில் கும்பகோணம் விவேக், அரியலூர் செல்வராஜ் என்ற 2 அப்பாவிகள் படுகொலை செய்யப்பட்டனர்.

கலவரத்திலும், காவல்துறை துப்பாக்கிச் சூட்டிலும் ஏராளமானோர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்ற எங்களின் கோரிக்கையை தமிழக அரசு ஏற்றுக் கொண்டிருந்தால், வடமாவட்டங்களில் வன்முறைகளை கட்டவிழ்த்துவிட விடுதலை சிறுத்தைகளுக்கும், சமூக விரோதிகளுக்கும் வாய்ப்பே கிடைத்திருக்காது. ஆனால், அதை செய்ய மறுத்துவிட்ட தமிழக அரசு, நீதிகேட்டு போராடச் சென்ற என்னை, விழுப்புரத்தில் கைது செய்து சிறையில் அடைத்தது.

இதனால் ஏற்பட்ட சூழலைப் பயன்படுத்திக் கொண்டு, வடமாவட்டங்களின் அனைத்துப் பகுதிகளிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும், சமூக விரோதிகளும் வன்முறைகளை கட்டவிழ்த்துவிட்டனர். பேருந்துகள் மீது கல்வீச்சு, பெட்ரோல் குண்டு வீச்சு, பொதுச் சொத்துக்களையும், தனியார் சொத்துக்களையும் சேதப்படுத்துதல், மரங்களை வெட்டிச் சாய்த்தல் உள்ளிட்ட குற்றச்செயல்களை விடுதலை சிறுத்தைகள்தான் அரங்கேற்றினர். பல இடங்களில் இத்தகைய வன்முறைகளில் ஈடுபட்டவர்களை பா.ம.க.வினரும், பொதுமக்களும் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

சிறையில் இருந்து நானும் மற்ற பா.ம.க. தலைவர்களும் விடுதலையான பிறகும் வன்முறைகள் தொடர்வதிலிருந்தே இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பதை புரிந்துகொள்ள முடியும். இந்த உண்மைகளையெல்லாம் தெரிந்துகொண்டு, உண்மையான குற்றவாளிகளை கைது செய்வதற்கு பதில், பா.ம.க. மீது பழிபோடும் முயற்சியில் காவல்துறையுடன் இணைந்து, தமிழக அரசும் ஈடுபட்டிருப்பது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.

விழுப்புரத்தில் நான் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மே 1ஆம் தேதி சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ம.க. இளைஞர் அணித் தலைவர் மருத்துவர் அன்புமணி, அரசின் அடக்குமுறையைக் கண்டித்து, அறவழியில் உணர்வுகளை வெளிப்படுத்துவோம் என்றுதான் கூறினாரே தவிர, வன்முறையைத் தூண்டும் வகையில் ஒரு வார்த்தையைக் கூட உதிர்க்கவில்லை. கைது செய்யப்பட்ட பிறகு அளித்த நேர்காணலிலும், பா.ம.க. சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கைகளிலும் அறவழியில் உணர்வுகளை வெளிப்படுத்தும்படிதான் அறிவுறுத்தப்பட்டது. அதன்படியே, பா.ம.க.வினரும், வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும் தங்களின் வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றி எதிர்ப்பை தெரிவித்தனர்.

அறவழியில் ஆர்ப்பாட்டம் நடத்தி ஆயிரக்கணக்கானோர் கைதானார்கள். காவல்துறையினரின் அடக்குமுறை காரணமாக, ஏராளமான வன்னியர்களும், பா.ம.க.வினரும் தங்களது வீடுகளை விட்டே வெளியேற நேர்ந்தது. இதனால், பா.ம.க.வினர் எவரும் ஊரில் இருக்க முடியாத நிலையில் அவர்கள்தான் வன்முறையில் ஈடுபட்டனர் என்று முதல்வர் கூறியிருப்பது அபத்தத்திலும் அபத்தமானதாகும்.

பா.ம.க.வைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்டோரை, தேசிய பாதுகாப்பு-ச் சட்டத்திலும், குண்டர் சட்டத்திலும் தமிழக அரசு கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் ஒரே கட்சியைச் சேர்ந்த, ஒரே சமுதாயத்தைச் சேர்ந்த இவ்வளவு பேர் மீது தடுப்புக் காவல் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டதில்லை. வன்னியர்களை தமிழக அரசு எந்த அளவுக்கு எதிரியாக கருதுகிறது என்பதை இதிலிருந்தே தெரிந்துகொள்ளலாம்.

தமிழக அரசின் இந்த அடக்கு முறைகளை எதிர்த்தும், இதற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், நீதிமன்றத்தில் பா.ம.க. வழக்குத் தொடர உள்ளது. இந்த வழக்கு விசாரணையின்போது, தமிழக அரசும் காவல்துறையும் செய்த தவறுகள் அம்பலமாகிவிடும் என்ற அச்சத்தில், பா.ம.க.வினர்தான் வன்முறைகளை நடத்தினார்கள் என்ற குற்றச்சாட்டை சட்டப்பேரவையில் பதிவு செய்து, அதன் மூலம் நீதித்துறையை மறைமுகமாக அச்சுறுத்த தமிழக முதல்வர் முயன்றிருக்கிறார்.

முதல்வர் ஜெயலலிதா, தமது அதிகார எல்லையை மறந்து பா.ம.க. தடை செய்யப்போவதாக கூறியிருக்கிறார். எந்தவொரு அரசியல் கட்சி மீதும் நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு மட்டுமே உண்டு. தமிழக அரசின் அனைத்து அடக்கு முறைகளையும், அச்சுறுத்தல்களையும் பா.ம.க. சட்டப்படி எதிர்கொள்ளும். அதே நேரத்தில் அதிகாரம் தம்மிடம் உள்ளது என்ற எண்ணத்தில் ஜெயலலிதா கட்டவிழ்த்துவிடும் அடக்குமுறைகளை தமிழக மக்கள் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். இதற்காக அவர்கள் சரியான நேரத்தில் சரியான பாடத்தை புகட்டுவார்கள் இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+