மே 18-ம் தேதி கடலூரில் நாம் தமிழர் கட்சியின் 4-ம் ஆண்டு விழா - சீமான் அறிவிப்பு

பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்கும் இந்த விழாவில், வெளிமாநிலங்களிலிருந்து முக்கிய இயக்கங்களின் நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.
இயக்குநர் சீமான் தலைமையில் நாம் தமிழர் கட்சி தொடங்கி 3 ஆண்டுகள் முடிவடைந்து 4-ஆம் ஆண்டு தொடங்குகிறது. இதையொட்டி வருகிற 18-ந் தேதி கடலூரில் நாம் தமிழர் கட்சி சார்பில் விழா கொண்டாடப்படுகிறது.
அன்று காலை 10 மணிக்கு கடலூர் டி.வி.என். திருமண மண்டபத்தில் ‘வீழ்வோம் என்று நினைத்தாயோ' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெறுகிறது. இதில் பேராசிரியர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கிறார்கள்.
மாலையில் பேரணியும், பொதுக்கூட்டமும் நடைபெறுகிறது. இதில் நாம் தமிழர் கட்சி நிறுவனர் சீமான் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். மேலும், பல முக்கிய தலைவர்களும் பங்கேற்கிறார்கள்.
இதுகுறித்து இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் இயக்குநர் சீமான் கூறுகையில், "மதத்தால், சாதியால் பிரிந்து கிடந்த தமிழர்களை, உணர்வால் தமிழராக ஒன்றிணைக்கத்தான் இந்த இயக்கத்தை, தமிழர் இனப்படுகொலை நடந்த துயர தினமான மே 18-ம் தேதி தொடங்கினோம்.
எமக்கென்று ஒரு அரசியல் பலம் வேண்டும். அப்போதுதான் நம் கோரிக்கைகளை பலமாக எதிரொலிக்க முடியும் என்ற உணர்வால் ஆரம்பிக்கப்பட்ட இந்தக் கட்சி, இப்போது மூன்றாம் ஆண்டை பூர்த்தி செய்துள்ளது.
நாம் தமிழர் கட்சியை முதலில் சி.பா.ஆதித்தனார் தொடங்கினார். அவர் தொடங்கியதை நாங்கள் புதுப்பித்து சிறப்பாக நடத்தி வருகிறோம்.
இந்த நான்காம் ஆண்டு விழாவில் இளைஞர்கள் உள்பட ஏராளமானோர் பெருமளவில் கலந்து கொள்வார்கள்.
வெளி மாநிலங்களில் எங்கள் இயக்கத்தைப் போல மொழிக்காகவும் இனத்துக்காகவும் போராடும் பல இயக்கங்களின் முக்கிய தலைவர்கள் நிகழ்ச்சிக்கு வருகிறார்கள். அவர்கள் யாரென பெயரைச் சொன்னால் வராமல் தடுத்துவிடும் அபாயமிருக்கிறது.
ஆரம்பத்தில் தான் சார்ந்த சாதிதான் பெரிது என நினைத்து பிரிந்து கிடந்த தமிழ்ச் சமூகம், சமீப காலம் வரை சாதியை ஓரளவு மறந்திருந்தது. ஆனால் இப்போது மீண்டும் தர்மபுரி, மரக்காணம் என சாதிக் கலவரங்கள் நிறைந்ததாக மாறிவிட்டது. இது வேதனைக்குரியது. இந்த நிலை மாறும். தமிழன் சாதியைத் தாண்டி தமிழ் தேசியத்தை நோக்கி வருவான் என்ற நம்பிக்கை உள்ளது," என்றார்.












Click it and Unblock the Notifications