அரசுப்பள்ளிகளில் ஆங்கிலவழிக்கல்வி... மெல்லத் தமிழ் இனி சாகும்: வைகோ

Subscribe to Oneindia Tamil

Vaiko
சென்னை: தமிழக அரசு தொடக்கப்பள்ளிகளை ஆங்கிலவழிப்பள்ளிகளாக மாற்றும் முடிவினை கைவிட வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தமிழகச் சட்டப் பேரவையில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு, தமிழ்வழிக் கல்விக்கு வேட்டு வைத்து, அன்னைத் தமிழ் மொழிக்கு பேராபத்தை ஏற்படுத்துவது ஆகும். வளர் தலைமுறை குறிப்பாக, பள்ளி மாணவர்கள் தமிழ்மொழியில் பயில்வதைவிட்டு, ஆங்கில மொழியில் பயில்வதற்கு ஊக்குவிப்புத் தந்து "மெல்லத் தமிழ் இனி சாகும்; மேலை மொழியே இங்கு ஓங்கும்" எனும் பெரும் விபரீதத்துக்கு தமிழக அரசின் முடிவு வழிவகுக்கும்.

"கடந்த கல்வியாண்டில், 320 அரசுப்பள்ளிகளில், முதல் மற்றும் ஆறாம் வகுப்புகளில் ஒவ்வொன்றிலும் இரண்டு ஆங்கில வகுப்புகள் தொடங்கப்பட்டன. மொத்தம் 640 பிரிவுகள் தொடங்கப்பட்டு 22,400 மாணவர்கள் படித்து வருகின்றார்கள். வரும் கல்வியாண்டு முதல் தேவைப்படும் அனைத்து அரசுத் தொடக்கப் பள்ளிகளிலும் நடுநிலைப் பள்ளிகளிலும் உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளிகளிலும் ஆங்கிலவழிப் பிரிவுகள் தொடங்கப்படும் என்ற கல்வி அமைச்சரின் அறிவிப்பு தமிழுக்கும், தமிழ் பயிற்சி மொழிக்கும் பெரும் கேடு செய்யும்.

அரசுப் பள்ளிகளில் தமிழ்வழிப் பிரிவுகளை ஆங்கிலவழிப் பிரிவுகளாக மாற்றும் அறிவிப்பை எதிர்க்கிற அனைவரும் ஆங்கில மொழிக்கோ ஆங்கிலத்தை ஒரு மொழியாகக் கற்றுக் கொள்வதற்கோ எதிரானவர்கள் அல்ல என்பதை வலியுறுத்திச் சொல்ல விரும்புகிறேன்.

அண்ணல் காந்தி முதல் அறிஞர் அண்ணா வரை தாய்மொழியில் கல்வி பயில்வதன் அவசியத்தையும் முக்கியத்துவத்தையும் பலமுறை வலியுறுத்தியுள்ளனர். தாய்மொழியை முதல் பயில்மொழியாகக் கொள்வதும் அதையே அனைத்துப் பாடங்களுக்குமான பயிற்றுமொழியாகக் கொள்வதும்தான் உலக நடப்பு. இரண்டாம் மொழியாக வேறொரு அயல்மொழியைக் கற்றுத் தேர்ச்சி பெறலாம்.

நம்மைப் பொறுத்த வரை இரண்டாம் மொழியாக ஆங்கிலம் கற்போம், கசடறக் கற்போம் என்றுதான் சொல்கிறோம். தமிழ்நாட்டின் தலைசிறந்த அறிஞர்கள் யாவரும் ஐந்தாம் வகுப்புக்குப் பிறகுதான் ஆங்கிலம் கற்றார்கள் என்பதே உண்மை. இதனால் அவர்கள் யாரும் ஆங்கில அறிவில் குறைந்துபோய் விடவில்லை.

தனியார் பள்ளிகளோடு போட்டியிட்டு அரசுப் பள்ளிகளும் மாணவர்களை ஈர்க்க வேண்டும் என்பதற்காக ஆங்கிலம் பயிற்று மொழி என்பதை ஏற்பதற்கில்லை. அரசுப் பள்ளிகளில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க விடாமல் தடுப்பது எது? தமிழ்ப் பயிற்றுமொழிதானா?

இங்கிலீஷ் மீடியம் வேண்டும் என பெற்றோர் விரும்புகிறார்கள் என்று பொதுமக்கள் மீது பழியைப் போடாமல், தமிழ்வழிப் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை, தொடக்கப் பள்ளியில் மட்டுமல்லாமல் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளிலும், ஏன் கல்லூரிப் படிப்பிலும் கூட, தமிழையே பயிற்றுமொழியாக்குவது போன்ற உருப்படியான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்த விரும்புகிறேன்.

அரசுப் பள்ளிகளிலும் 30 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் என்ற விகிதத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். கேரளத்தில் மலையாள வழிக் கற்றவர்களுக்கு வேலைவாய்ப்புக்கான தேர்வுகளில் தனி மதிப்பெண் கொடுப்பது போல் இங்கேயும் தமிழ்வழிப் படித்தவர்களுக்குப் பல சிறப்புச் சலுகைகள் வழங்க வேண்டும்.

கடந்த 1998ஆம் ஆண்டு தமிழ்ச் சான்றோர் பேரவை முனைவர் தமிழண்ணல் தலைமையில் நடத்திய 102 தமிழுணர்வாளர்களின் உண்ணாவிரதப் போரட்டத்தின் முடிவில் அன்றைய தமிழக அரசு நீதிபதி மோகன் தலைமையில் ஓர் விசாரணைக் குழு அமைத்து, அக்குழு கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் ஐந்தாம் வகுப்பு வரை தமிழ் அல்லது தாய்மொழி கட்டாயப் பயில்மொழியாகவும் பயிற்றுமொழியாகவும் இருக்கும் என்று ஆணையிட்டது. மெட்ரிக் பள்ளி உரிமையாளர்கள் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதி மன்றம் அந்த அரசாணை செல்லாது என்று கூறி விட்டது. இதற்கெதிராக தமிழக அரசு 1999இல் உச்ச நீதிமன்றத்தில் செய்த முறையீடு இன்னும் நிலுவையில் உள்ளது. வழக்கை விரைந்து முடித்து தமிழுக்கு சாதகமான தீர்ப்புப் பெற தமிழக அரசு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மொத்தம் 3,600 அரசுத் தொடக்கப் பள்ளிகளில் ஆங்கிலப் பயிற்றுமொழி வகுப்புகளைப் புகுத்துவதைத் தமிழக அரசு கைவிட்டு, ஆங்கிலம் உள்ளிட்ட எல்லாப் பாடங்களையும் தரமான முறையில் படிப்பிக்க ஆவன செய்ய வேண்டும் என வற்புறுத்துகிறேன். இது தமிழ் மொழிக்கான கோரிக்கை மட்டுமன்று, சமூகநீதிக்கான கோரிக்கையும் ஆகும். ஏனென்றால் தமிழ்வழிக் கல்வியே ஒடுக்குண்ட மக்கள் சமச் சீர் கல்வி பெற்று மற்றவர்களுடன் போட்டியிடும் வல்லமையையும் தன்னம்பிக்கையையும் அம்மாணவர்களிடையே உருவாக்கும்.

தமிழக அரசு ஆங்கிலவழி வகுப்புகளை விரிவாக்கும் முயற்சியை உடனடியாக கைவிட வேண்டும் என்றும், தமிழ்வழிக் கல்விக்குத் தகுந்த முறையில் ஊக்கம் அளிக்கும் நிலைப்பாட்டை மேற்கொள்ள வேண்டும் என்றும் தமிழக முதல்வரைக் கேட்டுக்கொள்கிறேன் இவ்வாறு வைகோ தனது அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+